தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து திருச்சி தில்லை நகர் கி.ஆ.பெ விஸ்வநாதன் பள்ளியில் நடைபெறும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாமை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார் பிறகு தொடர்ந்து மருத்துவ முகாம்களை பார்வையிட்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டசத்து பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு பயனானிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த முகாமில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் வசதிகள் உள்ளது மேலும் பல்வேறு பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டுள்ளது.
பின்னர் அமைச்சர் கே என் நேரு,நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- இந்த முகாமை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்திற்கும் “அம்மா” என பெயர் வைத்தார்கள். தற்போது நாங்கள் வைக்கும் திட்டத்திற்கு முதல்வர் பெயரை பயன்படுத்தக்கூடாது என வழக்கு தொடுத்து உள்ளார்கள். நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் போது இது குறித்து நான் பேச விரும்பவில்லை. திமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என எதிர்கட்சிகள் கூறி வந்தன. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து தான் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தற்போது ஓ.பி.எஸ் – ம் வெளியேறி உள்ளார். எங்கள் கூட்டணியிலிருந்து கட்சிகள் வெளியேற வேண்டும் என ஆசைப்பட்டார்கள். ஆனால் எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் விலகாது.
பல்வேறு விவகாரங்களில் இருந்து தப்பிப்பதற்காக தான் எடப்பாடி பழனிச்சாமி பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார். கிட்னி திருட்டு விவகாரத்தில் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் .இவ்வாறு அமைச்சர் கே என் நேரு கூறினார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன்,மேயர் அன்பழகன் , மாநகராட்சி ஆணையர் மதுபாலன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, கதிரவன், சௌந்தர பாண்டியன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன் துர்கா தேவி,அரசு மருத்துவக் கல்லூரி டீன் குமரவேல், மாமன்ற உறுப்பினர்கள் கமல் முஸ்தபா, புஷ்பராஜ்,கலைச்செல்வி, ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.