சென்னையிலிருந்து திருச்சிக்கு நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வருகை தரும் தமிழக முதல்வருக்கு திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஏற்பாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப் படவுள்ளது. அதைத் தொடர்ந்து காலை 11.30 மணிக்கு திருவெறும்பூரில் நடைபெறும் அரசு மாதிரிப் பள்ளித் திறப்பு விழாவில் பங்கேற்கிறாா். அங்கிருந்து அரசு விருந்தினா் மாளிகைக்கு வந்து அரசு அலுவலா்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். தொடா்ந்து மாலை 5 மணிக்கு கலைஞா் அறிவாலயம் சென்று, கட்சி நிா்வாகிகளுடன் கலந்துரையாடுகிறாா். நிகழ்வை முடித்து அரசு விருந்தினா் மாளிகையில் இரவு ஓய்வெடுக்கிறாா்.

மீண்டும் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புறப்பட்டு மன்னாா்புரம் வழியாக பஞ்சப்பூா் சென்று, புதிய பேருந்து முனையத்துக்கு அருகே பெரியாா் சிலையைத் திறந்து வைக்கிறாா். மேலும் ரூ. 236 கோடியிலான ஒருங்கிணைந்த காய்கனி மலா்கள் சந்தைக்கு அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா் ரூ. 129 கோடியில் கட்டப்பட்டுள்ள கனரக சரக்கு வாகன முனையத்தைத் திறந்துவைக்கிறாா். தொடா்ந்து பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் கருணாநிதி சிலையையும், ரூ.408 கோடியிலான பேருந்து முனையத்தையும் திறந்துவைக்கிறாா். முனையத்தின் முதல் தளத்தில் நகரப் பேருந்துகளின் இயக்கத்தைத் தொடங்கி வைக்கிறாா். தொடா்ந்து நடைபெறும் அரசு விழாவில் 50 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்குகிறாா். ரூ. 463 கோடியிலான முடிவுற்ற பணிகளைத் திறந்துவைத்து, ரூ. 277 கோடியிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 830 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறாா். விழா முடிந்து அரசு விருந்தினா் மாளிகை செல்லும் முதல்வா் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு எம்ஐஇடி கல்லூரியில் நடைபெறும் உலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஒன்பதாம் மாநாட்டில் பங்கேற்கிறாா். நிகழ்வு முடிந்து இரவு விமானம் மூலம் சென்னை செல்கிறாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்