திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2 வது மகள் ரபீதாபாத்திமா. குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் பொழுது திடீரென வலிப்பு தாக்கம் ஏற்பட்டது. திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது கல்லீரலில் யூரியா சுழற்சி சீர்கேடு காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதனை மருத்துவர் கண்டறிந்து கல்லீரல் மாற்றப்பட வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்காக லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டும், கல்லீரல் தேவை என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை கருத்தில் கொண்டு பெற்றோருக்கு முடிவெடுக்க தெரிவித்தனர். இதன் காரணமாக மிகவும் கலங்கிய நிலையில் இருந்த பெற்றோர்கள் திடீரென தாய் தனது குழந்தைக்கு தன்னுடைய கல்லீரலை கொடுக்க முடிவு செய்து மருத்துவரிடம் அணுகினார். அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் இளங்குமரன் மற்றும் மருத்துவ குழுவினர் இது குறித்து ஆலோசனை செய்து சுமார் 6மாதம் குழந்தையை மருத்துவ சிகிச்சைக்கு தயார்படுத்தி ஒருவருடம் ஒன்பது மாதம் ஆன நிலையில் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தற்போது இரண்டு வயதாகும் அந்த குழந்தை மிகுந்த ஆரோக்கியத்துடன் உள்ளது. மேலும் இன்று அந்தக் குழந்தையின் பிறந்த நாளில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

இதுதொடர்பாக செய்தியாளருக்கு பேட்டி அளித்த அறுவை சிகிச்சை நிபுணர் இளங்குமரன்.
இரண்டு வயதான குழந்தைக்கு மரபணு தீர்வாக கல்லீரல் மாற்று சிகிச்சை செய்துள்ளோம். கல்லீரலில் யூரியா சுழற்சி சீர்கேடு, மரபணு கோளாறு காரணமாகவும் குழந்தையின் ரத்தத்தில் அம்மோனியா அதிகமாகி நரம்பு மண்டலத்தை பாதித்து உயிருக்கே ஆபத்தாக ஆக முடியும்.

இந்த அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அம்மோனியா பிரச்சினைகள் சீராகி எதிர்காலத்தில் எந்த பிரச்சினையும் வராது இரண்டு வயதான இந்த குழந்தை எல்லோரும் போல நார்மலாக வளர்ச்சி அடைந்து கடைசிவரை இயற்கையாக வாழமுடியும். கல்லீரல் தானம் என்பது அவருடைய இரத்த வகைகளை பொறுத்துதான் ஒரே ரத்த வகை இருப்பது அவசியமல்ல, அதை சார்ந்து இருந்தாலே போதும் எனவே 18முதல் 55வரை வயதுள்ள உறவினர்களை மூன்று நிலைகளில் பரிசோதனை செய்து ஏற்கக்கூடிய நிலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வோம் என தெரிவித்தார். இந்த பேட்டியின் போது காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் செங்குட்டுவன் மற்றும் மருத்துவ குழுவினர் உடனிருந்தனர்.
