திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 21 வது வார்டு, நத்தர்ஷா பள்ளிவாசல் பின்புறம் உள்ள குடியிருப்பு பகுதியில் சாக்கடை கால்வாயில் குப்பைகள் தேங்கியுள்ளதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் நேற்று குற்றம் சாட்டி இருந்தனர். மேலும் இதற்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் இன்று பாதிக்கப்பட்ட பகுதியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும் மாநகராட்சியின் அலட்சியமே இதற்கு முக்கிய காரணம். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதாரமற்ற சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் மக்கள் போராட்டம் நடத்தப்படும் என மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மலைக்கோட்டை பகுதி செயலாளர் கமுருதீன்,அமமுக திருச்சி மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் தர்கா கலிபா சாதாத், மாவட்ட மாணவரணி செயலாளர் நாகூர் மீரான், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் கூறுகையில்:- இந்த 21 வது வார்டு கவுன்சிலர் எங்கள் குறைகளை கேட்டு அதை நிவர்த்தி செய்து கொடுத்திருந்தால் எங்களுக்கு ஏன் இந்த நிலைமை வருகிறது. ஒரு கவுன்சிலர் செய்யாததை அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எங்கள் குறைகளை கேட்டறிந்தது மட்டும் அல்லாது அதற்காக மக்களோடு நின்று போராட்டம் நடத்துவேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் இப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்ற கோரி மாநகராட்சிக்கு அழுத்தம் கொடுத்துள்ளார். அவருக்கு இப்பகுதி பொதுமக்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எனத் தெரிவித்தனர்.