இந்தியா முழுவதும் கொரோனாவின் நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் பலர் உயிரிழந்தும் வருகின்றனர். தற்போது இயற்கை நமக்கு அளித்த ஒரே வரம் மரங்கள் இவற்றில் இருந்து வெளிவரும் (ஆக்ஸிஜன்) சுத்தமான காற்று மட்டுமே நமக்கு சிறு ஆறுதல், அப்படிப்பட்ட மரங்களுக்கு தண்ணீர் ஊற்றாமல் தங்களின் இரு சக்கர வாகனத்திற்கு தண்ணீரை ஊற்றி வீணாக்கும் ஊழியர்களை என்னவென்று சொல்வது.
திருச்சி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மாநகரை அழகு படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் மரங்கள் மற்றும் செடிகள் நட்டு வைத்து இவைகளுக்கு தண்ணீர் ஊற்ற மாநகராட்சி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு கடந்த 10-ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை பிறப்பித்திருந்தது. இந்த ஊரடங்கில் மாநகராட்சி சார்பில் நட்டு வைக்கப்பட்ட செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வேண்டிய ஊழியர்கள் தண்ணீர் ஊற்றாமல் கொரோனா ஊரடங்கில் யார்? பார்க்க போகிறார்கள், யார்? நம்மை கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில் தங்களின் இருசக்கர வாகனத்திற்கு தண்ணீர் ஊற்றி கழுவி கொண்டிருந்தனர். வெயிலில் தண்ணீரின்றி கருகும் மரத்திற்கு தண்ணீர் ஊற்றாமல் அந்த தண்ணீரில் இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த மாநகராட்சியின் பொறுப்பற்ற ஊழியர்களை என்னவென்று சொல்வது…