ஆவின் நிர்வாகத்தின் சார்பில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்திற்கான நிலுவையில் உள்ள பணம் வழங்கும் தொடக்க நிகழ்ச்சி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 12 சங்கங்களுக்கு ரூ.81 லட்சம் நிலுவை தொகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், பால்வளத்துறை அமைச்சர் நாசர் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர்,

ஆவினில் கடந்த ஆண்டு 855 டன் பால் உற்பத்தி பொருட்கள் தயாரிக்கப்பட்டது.ஆனால் இந்தாண்டு 922டன் தயாரிக்கப்பட்டு விற்பனை முடிக்கப்பட்டுள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் விற்பனை மேலும் அதிகரிக்கும்.ஆவின் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.3 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இது வரலாற்றில் சிறப்பு வாய்ந்தது.பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்குரூ.329 கோடி நிலுவை தொகை வழங்கப்பட வேண்டி உள்ளது.அதில் அதிக அளவு நிலுவைத்தொகை திருச்சியில் தான் தர வேண்டி உள்ளது.எனவே தான் நிலுவைத்தொகை வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் தொடங்கினோம்.இந்த நிலுவைத்தொகை தமிழ்நாடு முழுவதும் உள்ள 4 லட்சத்து 30 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் நாசர்,

பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த ஆண்டுகளில் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை.இந்தாண்டு தீபாவளிக்கு முன்பாக நிலுவைத்தொகையினை வழங்கி உள்ளோம்.

பால் வளத்துறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலஜிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பத்தாண்டுகளாக பால் வளத்துறையில் எந்த செயல்பாடுகளும் நடைப்பெறவில்லை.தற்போது நாங்கள் மேற்கத்திய நாடுகள், கிழக்காசிய நாடுகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் ஆவின் விற்பனையை தொடங்கி உள்ளோம். அதே போல அண்டை மாநிலங்களிலும் விற்பனையை தொடங்கி உள்ளோம்.

ஆவின் வரலாற்றில் முதன் முறையாக நேற்று ஒரே நாளில் சென்னையில் ரூ.3 கோடிக்கு ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆவினில் சுத்தமான முறையில் பால் பொருட்கள் தயாரித்து சேவை அடிப்படையில் விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனா காலம் என்பதால் ஆவினில் மாதாந்திர கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த ஆட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆவின் சேர்மன் உள்ளிட்டோர் பதவி கலைக்கப்படவில்லை. அதே போல சங்கங்களும் கலைக்கப்படவில்லை. முதலமைச்சர் ஜனநாயகத்தை மதிக்க கூடியவர் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பால் உற்பத்தியாளர்களின் கால்நடைகள் பராமரிப்பு குறித்த குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் வாய்ஸ் கால் சேவை ஆகியவற்றையும் அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர்ரஹ்மான், பால்வளத்துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *