திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டம் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் , அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது.. இதில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில்.. நாடாளுமன்ற திருச்சி தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளர் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பில் உழைத்துக்கொண்டு இருந்தபோது, இத்தொகுதியை திமுக கூட்டணி கட்சிக்கு கொடுப்பது என திமுக தலைமை முடிவெடுத்தது. திமுக தலைமையின் உத்தரவை ஏற்று மனம் நோகாமல், முகம் சுளிக்காமல், தொடர்ந்து கூட்டணிக் கட்சி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதற்காக பாடுபட்டு சிறப்பாக செயலாற்றிய நமது கழக தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். அதே போல பெரம்பலூர் தொகுதியில் திமுக கட்சியினர் எதையும் எதிர்பாராமல் தொடர்ந்து அந்த தொகுதியில் கடுமையாகவும், சிறப்பாகவும் பாடுபட்டீர்கள். நாங்கள் உங்களுக்கு நிறைய கடமைப் பட்டிருக்கிறோம். என்றைக்கும் நீங்கள் சொல்கிற பணிகளை தட்டாமல் செய்பவனாக நான் இருப்பேன். அதுபோல நமது சட்டமன்ற உறுப்பினர்களும், நமது உள்ளாட்சி பிரதிநிதிகளும் இருப்பார்கள் என அமைச்சர் நேரு பேசினார்.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 101 வது பிறந்தநாள் விழாவை நாம் சீரோடும் சிறப்போடும் கொண்டாட வேண்டும். திருச்சி மாவட்டத்தில் 402 ஊராட்சிகள் 2 ஆயிரம் கிராமங்கள் உள்ளன. அனைத்து பகுதியிலும் கலைஞரின் திருவுருவப்படத்தை வைத்து, அவருக்கு மரியாதை செலுத்த வேண்டும்.. திமுக தொண்டர்கள் பொதுமக்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அதே போல மாநகரத்திலும் வட்ட செயலாளர்கள் தலைவர் கலைஞரின் 101 வது பிறந்தநாள் விழாவை நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.கலைஞர் கருணாநிதி 40 ஆண்டு காலம் செய்த பணியை, தற்போதைய முதல்வர் மு‌.க.ஸ்டாலின் பதவி ஏற்ற 3 ஆண்டு காலத்தில் செய்து முடித்துள்ளார். இந்தியாவில் அரசியல் கட்சிகளை இணைத்து இந்தியா கூட்டணியை அமைக்கக்கூடிய வகையில் உயர்ந்துள்ளார். இந்த கூட்டணியில் இருந்து நித்தீஷ் குமார், மம்தா பானர்ஜி வெளியே போனார்கள்.

இந்தியா கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என உழைத்தவர்களில் முதன்மையானவர் தற்போதைய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்த பணியும் செய்யாத பிரதமர் மோடியை இந்தியாவில் எதிர்த்து பேசிய முதல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகள் மத்தியில் நமது கட்சிக்கு மரியாதை பெற்று தந்திருக்கிறார். திருச்சி பஞ்சபூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரை வைக்க வேண்டும். மிக உயரமான கருணாநிதி சிலை அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரிடம் இது குறித்து பரிந்துரை செய்ய இந்த கூட்ட தீர்மானம் மூலம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்று பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *