மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

83 வருட பாரம்பரியமிக்க அகில இந்திய வானொலி நிலையத்தின் செயல்பாடுகள் விவசாயம், அரசியல், தேசியம், வெளிநாடு சம்பந்தமாக தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கிறது. பாரம்பரியமிக்க இந்த அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி பட்ஜெட்டில் மீன்வளத் துறைகாக மிகப்பெரிய திட்டத்தை கொண்டு வந்தார். மீனவ சமுதாயத்தை சேர்ந்த பெண்கள் முன்னேறும் வகையிலும் அவர்களின் வேலைவாய்ப்புக்காகவும் சிறப்பு பொருளாதார பூங்கா திட்டம் அறிவிக்கப்பட்டது. கடல்பாசி மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது.கடல் பாசியை அதிகளவு ஏற்றுமதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளோம்.இலட்சத்தீவு சென்று அதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்துள்ளோம். இந்த திட்டத்தால் பொருளாதாரம் அதிகம் வளரும். இந்தியாவில் கொச்சின், விசாகப்பட்டினம், சென்னை,மேற்குவங்கம்,பரதீப் ஆகிய ஐந்து இடங்களில் நவீன மீன்பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மீனவர்களுக்கு மண்ணெண்ணை,டீசல் உள்ளிட்டவற்றுக்கு மானியம் வழங்கி வருகிறோம். மீன் பிடி தொழிலுக்கு பயன்படுத்த கூடிய எரிப்பொருளுக்கான கூடுதல் வரியை (Road cess) நீக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.அது குறித்து நிதி அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.மீனவர்களின் கோரிக்கை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.2014 ஆண்டுக்கு முன்பாக தமிழக மீனவர்கள் 600 பேருக்கு மேல் இலங்கை கடற்படையால் சுட்டு கொல்லப்பட்டார்கள். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பின் ஒரு மீனவர்கள் கூட சுட்டுகொல்லப் பட வில்லை. இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள 23 தமிழக மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.தி.மு.க தேர்தல் அறிக்கையில் செய்ய முடியாததையெல்லாம் கூறினார்கள்.பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என கூறினார்கள் ஆனால் அது வழங்கப்படவில்லை.தி.மு.க சொல்வது ஒன்றாகவும் செய்வது ஒன்றாகவும் இருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *