திருச்சியில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று திருச்சி மாவட்டத்தில் இரவு 8 மணி முதல் கனமழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்தது, குறிப்பாக திருச்சி ஜங்ஷன் பாலக்கரை ஏர்போர்ட் பகுதிகளில் கனமழை இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பெய்தது.
இந்த கனமழை காரணமாக திருச்சி பெரிய மிளகுபாறை பகுதியிலுள்ள கிஆபெ மருத்துவக்கல்லூரி அருகே உள்ள பிசியோதெரபி கல்லூரி பாய்ஸ் ஹாஸ்டல் காம்பவுண்ட் சுவர் கனமழையின் காரணமாக 20 அடி நீளத்திற்கு வலுவிழந்து திடீரென இடிந்து விழுந்தது. இதில் காம்பவுண்ட் சுவரை ஒட்டி நிறுத்தப்பட்டிருந்த பெரிய மிளகுபாறை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சஞ்சீவி ராஜ் என்பவரின் ஆட்டோ மீது விழுந்ததில் ஆட்டோ முன்பகுதி மற்றும் பக்கவாட்டு பகுதிகள் முழுவதும் சேதமடைந்தது. இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் சஞ்சீவி ராஜ் திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.