கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த எம்.பி ஜோதிமணி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இடங்களில், மாற்றுத் திறனாளி மக்களுக்கு அலிம்கோ நிறுவனம் வாயிலாக செயற்கை உடல் உறுப்புகள் வழங்கிட மத்திய அரசு மூலம் தான் அனுமதி பெற்றிருப்பதாகவும், ஆனால் கரூர் மாவட்ட கலெக்டர் அதற்கான முகாம்களை நடத்த மறுக்கிறார் என கூறியும், மேலும் தன்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட கலெக்டரை கண்டித்து திடீரென தரையில் அமர்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கரூர் கலெக்டர் பிரபுசங்கர் எம்.பி ஜோதிமணியிடம் தரையில் அமர்ந்து மாநில அரசின் மாற்றுத்திறனாளிகள் முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

 அதனை எம்பி ஜோதிமணி ஏற்கவில்லை. அலிம்கோ சார்பில் சிறப்பு முகாம்களை நடத்துவதாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவதாக அவர் உறுதியுடன் தெரிவித்தார்.மேலும் இந்தப் போராட்டம் குறித்து ஜோதிமணி கூறியதாவது: கரூர் பாராளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி ஆற்ற விடாமல் மாவட்ட ஆட்சியர் தடுக்கிறார். தூத்துக்குடி உட்பட மற்ற நாடாளுமன்றத் தொகுதியில் இந்தச் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இருக்கும் ஆட்சியர்கள் சிறப்பு முகாம்களை நடத்தினார்கள். அங்கு ஆயிரம் பேருக்கும் மேல் செயற்கை உடல் உறுப்புகளை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.

கரூர் மாவட்டத்திலும் அப்படிப் பயனாளிகளை தேர்ந்தெடுத்தால், அந்நிறுவனம் உடனடியாக அனைவருக்கும் செயற்கை உறுப்புகளை வழங்கிவிடும். ஆனால் கமிசன் என்ற ஒரே நோக்கத்திற்காக இந்தத் திட்டம் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கக்கூடிய உபகரணங்களை கிடைக்கவிடாமல் மாவட்ட கலெக்டர் தடுக்கிறார்” என்று எம் பி ஜோதிமணி குற்றம்சாட்டினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்