திருச்சி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஜனவரி 2 ம் தேதி ஆஞ்சநேய சுவாமிக்கு 100008 வடை மாலை சாத்துதல் விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெறுவது குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் அனுமந் ஜெயந்தி விழா நடைபெறுவது குறித்து திருக்கோயில் செயல்அலுவலர் ஹேமாவதி கூறுகையில்:-

திருச்சி கல்லுக்குழி அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் வருகிற ஸ்ரீ பிலவ வருடம் மார்கழி மாதம் 18-ம் தேதி (02-01-2022) ஜனவரி 2 ஞாயிற்றுக்கிழமை அமாவாசை மூலம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டும், ஆஞ்சநேய பக்தர்கள் நன்மைக்காகவும், உலக நன்மையைக் கருதியும் இத்திருக்கோயிலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமிக்கு 100008 வடை மாலை சாத்துதல் விழா மற்றும் அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இவ்விழா அதிகாலை 5 மணிக்கு ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனையுடன் துவங்கி, காலை 7 மணி முதல் தொடர்ந்து ஒரு லட்சத்து எட்டு வடைமாலை சாற்றுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவின் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாங்கள் பெயர் நட்சத்திரங்களை முன்பதிவு செய்து ரசீது பெற்று செல்லவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ஆஞ்சநேயர் சுவாமி திருக்கோவில் நடைபெறும் அனுமந் ஜெயந்தி உற்சவத்திற்கு வரும் பக்தர்கள் முகக் கவசம் அணிந்தும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரும்படி கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் அர்ச்சகர் கஸ்தூரி ராஜன், கோவில் ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள், செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *