திருச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற 33 வயது இளைஞர் கடந்த 15-ம் தேதி திருச்சி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டுவரப்பட்டார்.. வீட்டில் சுமார் 15 அடி உயர முதல் மாடியில் இருந்து தவறிவிழுந்ததில் இரும்பு ராடு ஒன்று அவரது கழுத்தில் சொருகி உள்ளது. அதிக உயரத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் இரும்புக் கம்பி குத்திக் கிழித்ததால் ஏற்பட்ட பாதிப்பு என சற்று ஆபத்தான நிலையில் அந்த இளைஞர் இருந்தார். டாக்டர் ஸ்டீபன் மற்றும் டாக்டர் விஜய் ஆனந்த் ஆகியோர் உடனடியாக செயல்பட்டு முதலுதவி சிகிச்சைகளை அளித்து நோயாளியின் இதய துடிப்பு மற்றும் ரத்த ஓட்டம் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.

இரும்புக் கம்பியை பாதுகாப்பாக அகற்றுவதற்கு இரும்புக் கம்பியின் நீளத்தைக் குறைப்பது அவசியமானதாக இருந்தது. மேலும் ஸ்கேன் எடுப்பதற்கும் இதர பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் இரும்புக் கம்பி நீட்டிக் கொண்டிருப்பது சிரமத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாலும் முதலில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அத்துடன் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிசோதனை செய்யபட்டு ரத்தக்குழாய்களில் பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் இரும்புக் கம்பியை லேபராஸ்கோபிக் நிபுணர் டாக்டர் முகமது மன்சூர் தலைமையிலான மருத்துவ நிபுணர் குழுவினர் எந்தவித சிக்கலும் இல்லாமல் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றினர்.

இஎன்டி நிபுணர் அஜய் மாணிக்கம் கண்காணிப்பில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் விதுன் ராஜ் பாரத், ரத்தக்குழாய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆனந்த் ஆகியோரின் உதவியுடன் டிரக்கியஸ்டமி செய்யப்பட்டது. நோயாளி மூச்சுவிடுவது சிரமமாக இருந்தநிலையில், மயக்க மருத்துவர்கள் டாக்டர் கார்த்திக் மற்றும் டாக்டர் அழகப்பன் ஆகியோர் சீரான சுவாச வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். மேலும் அந்த நிலையிலேயே உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக டாக்டர் முரளிரங்கன் எண்டோஸ்கோபி சிகிச்சையை மேற்கொண்டார்.

இந்த நிலையில், ஆஸ்பிரேசன் நிமோனியாவுக்கான அறிகுறிகள் தென்பட்டது சற்று பின்னடைவாக அமைந்தது. நுரையீரல் சிகிச்சை நிபுணர் தமிழரசன் நிமோனியா பாதிப்பு ஏற்படாத வகையில் சிகிச்சைகளை அளித்தார். உலகின் வேறெந்த பகுதியிலும் உள்ள சிறந்த மருத்துவமனைகளுக்கு இணையான மருத்துவர் குழுவினை தாங்கள் பெற்றுள்ளதாகவும் திருச்சி அப்போலோ மருத்துவமனை தலைவர் மற்றும் மூத்த பொது மேலாளர் சாமுவேல் பெருமிதம் தெரிவித்தார். அப்போலோ மருத்துவமனை நிர்வாகி டாக்டர் சிவம் மற்றும் நிவாரணப் பிரிவின் (எச்சிஎஸ்) பொதுமேலாளர் மணிகண்டன் மற்றும் செயல்பாட்டு பொது மேலாளர் சங்கீத் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *