திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயியின் கிழக்கு வாசலில் புதிதாக கட்டப்பட்டுள்ள 7 நிலைகளுடன் கூடிய 108 அடி உயர ராஜகோபுரம் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோயிலாகும். இக்கோயிலில் உள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்ததாகவும் பக்தர்கள் வேண்டும் வரமளித்து காக்கும் தாயாக விளங்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால், அம்மனைத் தரிசிக்க இக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

இக்கோயிலில் 2001ம் ஆண்டுக்கு பிறகு, 2015-ம் ஆண்டில் குடமுழுக்கு பணிகள் தொடங்கின. அப்போது, மேற்கு, தெற்கு, வடக்கு வாசல்களில் இருந்த கலசக் கோபுரங்கள் அகற்றப்பட்டு, புதிதாக 5 நிலைகளுடன் கூடிய கோபுரங்கள் கட்டப்பட்டு. கருவறை விமானத்துக்கும் புதிய கோபுரங்களுக்கும் கடந்த 2017, பிப்.6-ம் தேதி குடமுழுக்கு நடைபெற்றது. இந்தநிலையில், கோயிலின் கிழக்கு வாசலில் ஏற்கனவே இருந்த கலசக் கோபுரத்தை இடிந்து வீட்டு, அதில் 60 அடி நீளம், 43 அடி அகலம், 108 உயரத்தில்புதிதாகராஜகோபுரம் கட்டத்திட்டமிடப்பட்டு, 29 அடி உயரத்துக்கு கல்காரம் (கருங்கல் கட்டு மானம்) ரூ.2.25 கோடி கோயில் நிதியிலிருந்தும், மீதமுள்ள பகுதி உபயதாரர்களின் நிதியைக் கொண்டும், 7 நிலைகளுடன் 108 அடி உயரத்துக்கு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில், நிலைவாசல் ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜகோபுரத்தின் உச்சியில் 7 கலசங்கள் பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடப்பெற்றது.

இந்த கோபுரத்தில் சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வரலாற்றை எடுத்துரைக்கும் வகையில், 324 சுதை சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. வேண்டுதல் நிறைவேறிய பின்னர் பக்தர்களால் செய்யப்படும் நேர்த்திக் கடன்களான கரும்புக் காவடி எடுத்தல், அலகு குத்துதல், அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்டவை. கதை சிற்பங்களாக கோபுரத்தில் முதல் நிலையில் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேக விழாவிற்காக கடந்த 3ஆம் தேதி இரவு பூர்வாங்க பூஜைகளை தொடங்கப்பட்டு தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, முதல் கால பூஜை இரண்டாம் கால பூஜை மூன்றாம் கால பூஜை நான்காம் கால பூஜை உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து இன்று ராஜகோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள 7 விமான கலசங்களுக்கு சிவாச்சாரியார்களை கொண்டு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது .இவ்விழாவில் தமிழக நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு ,மேயர் அன்பழகன் ,மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் எவ்வித அசம்பாவிதம் நடைபெறா வண்ணம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *