திருச்சி ஏர்போர்ட் எதிரே உள்ள டி மார்ட் வணிக வளாகம் அருகே நர்சரி கார்டன் பின்புறத்தில் உள்ள பள்ளத்தில் வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் வெட்டுக் காயத்துடன் உயிருக்குப் போராடிய வாலிபரை கண்டதும் உடனடியாக ஏர்போர்ட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து வாலிபரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மேலும் போலீசார் விசாரணை நடத்தியதில் ஏர்போர்ட் பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மகன் அருண் வயது 25 என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்ததும் தெரிய வந்தது. மேலும் கஞ்சா வாங்கி விற்பதில் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்களுடன் அருணுக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று மதியம் நடந்த சண்டையின்போது அருணின் தலைப்பகுதியில் மூன்று இடங்களிலும் மற்றும் கை மணிக்கட்டு பகுதி உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டியுள்ளனர். மேலும் இதுகுறித்து சந்தேகத்துக்கிடமான மூன்று நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.