திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கிளியநல்லூர் ஊராட்சியில் சுமார் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து 10 நாட்களாக பொது குடிநீர் விநியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவி வானதியிடம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை திருச்சி சேலம் தேசிய நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வாத்தலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவி குடிநீர் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டிவி அளித்தால் மட்டுமே மறியலை கைவிடுவோம் என்று கூறி தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது.

அப்போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவி வானதியின் கணவர் சுரேஷ்குமார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் மூன்று நாட்கள் தான் தண்ணீர் வரவில்லை என்று சொல்லுங்கள் பல நாட்களாக தண்ணீர் வரவில்லை என்று சொல்வதில் நியாயம் இல்லை என்று கூறி சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் பல நாட்களாக குடிநீர் கிடைக்கவில்லை. தெருக்களில் குப்பைகள் அகற்ற படுவதில்லை. சாக்கடைகள் தூர்வாரப்படவில்லை மேலும் தெருவிளக்குகள் எரியாமல் தெருக்கள் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க ஊராட்சி மன்ற தலைவியிடம் முறையிட்டால் உரிய நடவடிக்கையும் இல்லை என ஊராட்சி மன்ற தலைவி கணவரிடம் ஆவேசமாக பேசினர். இதனையடுத்து சுரேஷ்குமார் அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து போலீசார் இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *