திருச்சி மாநகராட்சிக்காண 2023 2024 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது . திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிதி குழு தலைவர் முத்துச்செல்வம் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் 2022 -2023 ஆம் ஆண்டின் திருத்திய மதிப்பீட்டின்படி மாநகராட்சிக்கான வருவாய் ரூ.1,31,018.80 லட்சம், செலவு ரூ.1,43,535.45 லட்சம் எனவும் ரூ.12,516.65 லட்சம் பற்றாக்குறையாகவும் கல்வி நிதியில் வருவாய் ரூ.3056 லட்சம், செலவு ரூ.1552, உபரி ரூ.1504 லட்சம் எனவும் குறிப்பிட்டார். மேலும் கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்டு முடிவடைந்த பணிகளையும், நடந்து வரும் பணிகளையும் பட்ஜெட்டில் வாசித்தார். அதில் சாலைகள், பராமரிப்பு பணிகள், வணிக வளாகம், கழிப்பிடம் உள்ளிட்ட 70 பணிகள் ரூ.72340.74 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டது.

2023 – 2024 ஆம் ஆண்டில் திருச்சி மாநகராட்சி பொதுநிதியின் கீழ் ரூ.500 லட்சம் மதிப்பீட்டில் 300 கி.மீ நீளமுள்ள மண்சாலைகளை தார்சாலைகளாகவும், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள், பேவர் பிளாக்குகள் பொருத்தப்பட்ட சாலைகளாகவும் மாற்றப்படும், உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவு நீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை, ரூ.3250 லட்சம் மதிப்பீட்டில் 65 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல் அதே போல 65 வார்டுகளிலும் ரூ.1625 லட்சம் மதிப்பீட்டில் பல்நோக்கு அலுவலக பயன்பாட்டுக்கட்டிடம், திருச்சி மாநகரில் திருவெறும்பூர், உறையூர், ஸ்ரீரங்கம் ஆகிய பகுதிகளில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் உறவினர்களால் கைவிடப்பட்ட முதியவர்கள் இல்லம் கட்டப்படும், ரூ.100 லட்சம் மதிப்பீட்டில் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலகங்கள் கட்டும் பணி உள்ளிட்ட 10 புதிய பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதர திட்டங்களின் கீழ் பஞ்சப்பூர் பகுதியில் ஒருங்கிணைந்த சந்தை, ஒலிம்பியாட் அமைக்கும் பணி, சமுதாய கூடம் உள்ளிட்ட 11 பணிகளும், கல்வி நிதியின் கீழ் ரூ.2085 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி பள்ளிகளை தரம் உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படும்.

இந்த பணிகளுக்கு மாநகராட்சிக்கு வருவாய் ரூ.1,02,670 லட்சம் எனவும் செலவு ரூ102,595.20 லட்சம் எனவும் உபரியாக ரூ.74.80 லட்சம் இருக்கும் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்வி நிதியில் வருவாய் ரூ.3156 லட்சம், செலவு ரூ.2345 லட்சம் உபரி ரூ.811 லட்சம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். பட்ஜெட் கூட்டத்திற்கு முன்னதாக நடந்த அவசர கூட்டத்தில் திருச்சியில் மெட்ரோ ரயில் அமைப்பதற்கு மூன்று சாத்தியமான வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இது குறித்து அரசுக்கு முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. திருச்சியில் மெட்ரோ ரயிலுக்கான முதற்கட்ட அறிக்கை.. *மொத்த நீளம் : 68 கி.மீ*1. சமயபுரம் முதல் வயலூர் சாலை – 18.7 கி.மீ 2. மத்திய பேருந்து நிலையம் வழியாக “துவாக்குடி முதல் பஞ்சப்பூர் வரை” – 26 கி.மீ 3. “திருச்சி junction முதல் பஞ்சப்பூர் வரை” விமான நிலையம் & Ring road வழியாக – 23.5 கி.மீ. இந்தக் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், மாமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *