திருச்சி மாநகராட்சி மேயராக அன்பழகன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை மேயராக திவ்யா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். திருச்சி மாநகராட்சி தேர்தல் கடந்த மாதம் 19ஆம் தேதி நடைபெற்று 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்தது. இதில் மொத்தமுள்ள 65 வார்டுகளில் 49 வார்டுகளில் திமுக வேட்பாளர்கள், 5 வார்டுகளில் காங்கிரஸ், 3 வார்டுகளில் அதிமுக, மதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் தலா 2 இடங்களிலும் , அமமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

இவர்கள் அனைவரும் கடந்த 2ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று காலை தொடங்கியது. இதற்காக திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள மாமன்ற கூட்டம் மன்றத்தில் காலை 9.30மணியளவில் திமுக வேட்பாளர் மு.அன்பழகன் மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமானிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

அதனை தொடர்ந்து கூட்ட அரங்கில் மேயர் வேட்பாளரை எதிர்த்து யாரும் போட்டியிட முன் வராததால் திமுக வேட்பாளர் அன்பழகன் திருச்சி மேயராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இதனை அடுத்து திருச்சி மேயராக அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார்.திருச்சி மாநகராட்சியில் திமுக சார்பில் மேயர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு மேயர் அன்பழகனை வாழ்த்தினார்கள். தொடர்ந்து அனைத்து கவுன்சிலர்களும் பாராட்டு தெரிவித்தனர்.

இந்நிகழ்வில் கலெக்டர் சிவராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரகுமான்,நகர பொறியாளர் அமுதவள்ளி மற்றும் அதிகாரிகள் அரசியல் கட்சி பிரமுகர்கள் தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கு திமுக வேட்பாளர் திவ்யா தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் மனுத்தாக்கல் செய்ய முன்வராததால் துணை மேயராக திவ்யாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இதையொட்டி காலையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்த மறைமுக தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள் 14-வது வார்டு அரவிந்தன், 37- வது வார்டு அனுசியா, 65- வது வார்டு அம்பிகாபதி ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தனர் .இதேபோல் 20 ஆவது வார்டு சுயேட்சை வேட்பாளர் எல் ஐ சி சங்கரும் புறக்கணித்தார் ஆனால் இந்த பதவியேற்பில் அமமுக கவுன்சிலர் செந்தில்நாதன் பங்கேற்றார்.

இன்று மதியம் துணை மேயர் திவ்யா பதவியேற்பின் போது மாமன்ற கூட்டம் அரங்கின் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால் திமுக நிர்வாகிகள் அதிகப்படியானோர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர் திடீரென அனைவரும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முற்பட்டதால் கூட்ட அரங்கின் கதவு உடைந்து விழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்