கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் உள்ள பூராண்டான் பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் பரமேஸ்வரி. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் இவரது வீட்டில் வைத்திருந்த 18 சவரன் தங்க நகை திருடப்பட்டது.இதனையடுத்து, சுல்த்தான் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அந்த வீட்டில் பதிந்த கைரேகைகளை பதிவு செய்த போலீசார் அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். பதிவு செய்யப்பட்ட கைரேகைகளை , பழைய குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஆய்வு செய்தபோது, கோவை வடவள்ளி மற்றும் தொண்டாமுத்தூர் காவல் நிலையங்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட ராமு என்பவரது கைரேகையுடன் ஒத்துபோனது. சமீபத்தில் சிறையில் இருந்து வெளியில் வந்த ராமு தனது மனைவி இந்துராணியுடன் பல்லடம் அருகே வசித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து வீட்டில் பதிவான கைரேகை அடிப்படையில் , சுல்த்தான் பேட்டை போலீசார் பல்லடம் வீட்டிலிருந்த ராமு மற்றும் அவரது மனைவி இந்துராணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் இருந்து 13 சவரன் தங்க நகை மற்றும் 52 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் விசாரணையில் கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிள் மூலம் கிராமங்களில் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, அந்த வீடுகளில் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை வாடிக்கையாக வைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட கணவன் மனைவி இருவரையும் சூலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்கள் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *