மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை திருச்சி மாவட்டத்தில் ஆகஸ்ட் 23,24,25 ஆகிய மூன்று நாட்கள் 9 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்டு வருகிறார். இன்று மாலை திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, திருச்சி மேற்கு, ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிகளில் பயணம் மேற்கொள்கிறார். இந்நிலையில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி விவசாய சங்கபிரதிநிதிகள் மற்றும் சிறு,குறு தொழில் முனைவோர்கள், நகர்நல சங்கத்தினர் உடன் கலந்துரையாடினார். விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகள் விளைவிக்கும் சிறுதானியங்களை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்தனர். இந்நிகழ்வில் மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி , சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, கோகுல இந்திரா, செம்மலை, சிவபதி,வளர்மதி, முன்னாள் எம்பி ரத்தினவேல் மற்றும் புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
அதனை தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது.. விவசாய பணி கடினமான பணி அதை நான் நன்கு உணர்ந்து உள்ளேன். விவசாயத்தில் உள்ள இடர்பாடுகள் கஷ்ட நஷ்டங்களை நான் நன்கறிவேன். ஆனால் முதல்வர் ஆன பிறகு அனைத்து தரப்பினரையும் அரவணைத்து செல்ல வேண்டி இருந்தது. அந்தந்த துறைகளுக்கு ஏற்பநிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அனைத்து துறைகளும் முக்கியம் வாய்ந்த துறைகள் தான். கடினமான துறை வேளாண் துறை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. உணவும் நீரும் மனிதனின் அடிப்படை தேவைகள். தட்டு பாடற்ற தண்ணீர் விவசாயிகளின் அடிப்படை தேவையாக உள்ளது. தண்ணீர் இருந்தால் தான் விவசாயம் மேற்கொள்ள முடியும். அதிமுக அரசு நீர் மேலாண்மை என்ற அமைப்பை ஏற்படுத்தினோம். அந்த அமைப்பை தலைசிறந்த ஓய்வு பெற்ற பொறியாளர்களைக் கொண்டு செயல்படுத்தினோம். இந்த அமைப்பு மூலம் பருவ காலங்களில் கடலில் வீணாக கலக்கும் நீரை அளவீடு செய்தோம், ஏரி குளங்கள் கணக்கெடுக்கப்பட்டு தூர்வாரப்பட்டது. இந்த அமைப்பின் மூலம் கடலில் வீணாக கலக்கும் நீரை சேமிக்கும் வகையில் எங்கெங்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்பதை கணக்கெடுத்தோம். ஆனால் இந்த திட்டங்களை செயல்படுத்த போது முனைந்த போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
மேட்டூரில் தொடங்கி காவிரி ஆறு கடலில் கலக்கும் இடங்களில் 4 இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் திமுக அரசு பதவி ஏற்றவுடன் அதனை ரத்து செய்துவிட்டது. மேட்டூர் அணையை தூர்வாரி நாள் ஒன்றுக்கு ஐந்தாயிரம் லாரிகள், வண்டல் மண் எடுப்பதற்கு கொண்டு செல்லப்பட்டது. அதே போன்று 14 ஆயிரம் ஏரிகள் கணக்கிடப்பட்டு 6000 ஏரிகள் தூர்வாரப்பட்டது. பருவ காலங்களில் பெய்த மழையின் காரணமாக தூர்வாரப்பட்ட ஏரிகள் மூலம் அதிகப்படியான நீர் சேமிக்கப்பட்டது இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் பயனடைந்தனர். குடிநீர் தேவையும் பூர்த்தியானது. விவசாயிகள் விளைவிக்கும் நெல் கரும்புக்கு மத்திய அரசு தான் விலை நிர்ணயம் செய்யும். மாநில அரசுகளுக்கு அந்த அதிகாரம் இல்லை. ஆனாலும் தமிழக அரசு விவசாயிகளுக்கு மானிய தொகைகளை வழங்கும். விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த கோரிக்கை மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்படும். அதிமுக ஆட்சி காலத்தில் மக்காச்சோளம் அமெரிக்கன் படைப்புழுவால் தாக்கப்பட்டு விளைச்சல் பாதிப்படைந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று 48 கோடி ரூபாய் செலவில் ரசாயன பொருட்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.இதனால் விவசாயிகள் நல்ல விளைச்சல் பெற்றனர். மக்காச்சோளத்தில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுவதால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு 13 ரூபாய்க்கு விற்கப்பட்ட மக்காச்சோளம் என்று 25 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் லாபமடைகின்றனர். விவசாயிகளை பாதுகாக்கும் அரசாக அதிமுக அரசு இருந்து வருகிறது. சிறு,குறு தொழில்கள் நிறைந்த நாடாக இந்தியாவிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. எனவே அதனை பாதுகாப்பது எனது கடமை என்றார்.