திருச்சி கே. கள்ளிக்குடியில் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி டி என் பி எஸ் சி யு பி எஸ் சி உள்ளிட்ட மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இங்கு 46 வது வெற்றி விழா இன்று அகாடமி அரங்கத்தில் நடந்தது. இதில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 ,குரூப் 4 தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் பங்கேற்றனர். வெற்றியாளர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். வெற்றியாளர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்பட்டனர். மேலும் விழாவில் வெற்றியாளர்கள் பணிக்காலத்தில் கையூட்டு பெறுவதில்லை என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன் பேசும்போது, படித்த லட்சக்கணக்கான மாணவர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். வேலைக்காக இனிமேலும் எத்தனை காலம் படித்துக்கொண்டே இருப்பது என்ற சலிப்பு இளைஞர்களுக்கு ஏற்படுகிறது. ஆகவே வேலை வாய்ப்புகளை விசாலமாக்க ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும். இன்றைய காலகட்டத்தில் இரு மொழி , மும்மொழியை தாண்டி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தான் முக்கியம். எத்தனை மொழிப் படித்தாலும் வேலை வாய்ப்பு என்பது எட்டாக்கனியாக இருப்பதை உணர வேண்டும். வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றியாளர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். கையூட்டு பெறாமல் மக்களுக்கு சேவை செய்ய உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.