அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளரும், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவருமான கிறிஸ்டோபர் திலக், மாநிலங்களவை (Rajya Sabha) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி விமான நிலையம் வருகை தந்த அவருக்கு, காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிறிஸ்டோபர் திலக், தனது அரசியல் பயணம் குறித்தும் கட்சியின் தலைமைக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். ஒரு சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து வந்து, அடிமட்டத் தொண்டனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய எனக்கு, இவ்வளவு பெரிய பொறுப்பை காங்கிரஸ் தலைமை வழங்கியுள்ளது. இது எனக்குக் கிடைத்த பெருமை மட்டுமல்ல, என்னைப்போல உழைக்கும் ஒவ்வொரு தொண்டனுக்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரச்சினைகளையும், குறிப்பாக திருச்சி மாவட்டத்தின் தேவைகளையும் உரத்த குரலில் ஒலிப்பேன் என உறுதி அளித்தார். திருச்சியை அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல மற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படப் போவதாகத் தெரிவித்தார். விரைவில் பொதுமக்களையும் கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்று, அதன் அடிப்படையில் திட்டங்களை வகுக்க உள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
