தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ரவி மினி ஹாலில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நவநீதன் வாழ்த்துரை வழங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரபு, மாநில செயலாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் திருவரங்கன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த கூட்டத்தின் முக்கிய கோரிக்கைகளாக, 100 நாள் வேலை திட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்தை வழங்க வேண்டும், கணினி உதவியாளர்கள், எஸ்பிஎம் திட்ட ஒருங்கிணைப் பாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், கலைஞர் கனவு இல்ல திட்டத்துக்கான ஊழியர் கட்டமைப்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடம் வழங்க வேண்டும், ஊராட்சி செயலாளர்களுக்கு தேர்வு நிலை, சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வுபெறும் ஊராட்சி செயலாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் காலியாக உள்ள அனைத்து நிலை காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும்,

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தை உடனடியாக மேற்கொள்வதோடு, புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் நிரப்பப்படாத காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளாட்சி தேர்தல் பணிக்கு மாநில, மாவட்ட, வட்டார அளவில் நிரந்தர ஊழியர் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தின் முடிவில் மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நன்றி கூறினார். கூட்டத்துக்குப்பின் மாநிலத் தலைவர் காந்திமதிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 388 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இவற்றில், 20க்கும் மேற்பட்ட ஒன்றியங்களை பிரித்து புதிய ஒன்றியங்களை உருவாக்க வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம். ஏற்கனவே, பல புதிய மாவட்டங்கள், தாலுகாகளல் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஒன்றியங்கள் மட்டும் பிரிக்கப்படவில்லை. 9 ஒன்றியங்களை பிரிக்கும் கருத்துரு அரசு பரிசீலனையில் உள்ளதாக கூறினாலும், அதற்கான நடவடிக்கையும் இல்லை.

 தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 526 கிராம ஊராட்சிகளில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட, 30 சதவீத கிராம ஊராட்சிகளையும் பிரிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இவை பிரிக்கப்படாததால், ஏற்கனவே, துறையில் 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ள நிலையில், ஊழியர்களுக்கு பணிச்சுமை, கூடுதல் அழுத்தம் ஏற்படுகிறது. ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையில், அவர்கள் காலஅவகாசம் கோரியுள்ளனர். அதன்படி, 2 மாதங்களுக்குள் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மாநில செயற்குழுவை கூட்டி போராட்டம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகள் முடிவு செய்யப்படும். ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய, புதிய திட்டங்களை தொடங்கும் போது, ஏற்கனவே, உள்ள குறைந்த அலுவலர்களை கொண்டே அப்பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதனால், புதிய திட்டங்களை அறிவிக்கும் போது அதற்கான ஊழியர் கட்டமைப்பையும் உருவாக்கி அரசாணை வெளியிட வேண்டும்‘‘, என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்