உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய அளவு தண்ணீரை திறந்து விட வலியுறுத்தியும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்கு பின் திறக்கப்படும் குறைந்த நீரைக்கூட தடுக்கும் கர்நாடக பாஜக மற்றும் அமைப்புகளைக் கண்டித்தும், தமிழக அரசு, பலமுறை ஒன்றிய அரசிடம் வலியுறுத்தியும் தமிழக விவசாயிகளை பற்றி கவலைப்படாத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டம் முழுவதும்

காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம், திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் கடையடைப்பு நடைபெற்று வருகிறது. மேலும், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மாநகராட்சி மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா, மதிமுக மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, மனிதநேய மக்கள் கட்சி ராஜாமுகமது, அஷ்ரப், தமிழ்நாடு விவசாய சங்கம், மாவட்டத் தலைவர், அயிலைசிவசூரியன்,

மக்கள் அதிகாரம் மாவட்ட செயலாளர் செழியன், சமூக நீதிப் பேரவையில் நிர்வாகி ரவிக்குமார் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சியில் இருந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கண்டன ஆர்ப்பாட்டத்தையொட்டி ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *