சோழப் பேரரசு கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் கொடி அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஓட்டல் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு நிறுவன தலைவர் சரவணத்தேவர் தலைமை தாங்கினார். அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமுதாயத்திற்கும், விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும். ஒரே சமுதாயத்திற்கு மூன்று சாதி சான்றிதழ்கள் வழங்கப்படுவதை ஒழுங்குமுறை படுத்த வேண்டும், திருச்சி விமான நிலையத்திற்கு ஆசிய கண்டத்தின் பேரரசன் ராஜராஜசோழ தேவரின் பெயரை சூட்ட வேண்டும்,

உலக தமிழர்களின் பேரடையாளம் ஸ்ரீ கள்ளச் சோழன், ராஜராஜ சோழ தேவருக்கு தனி மணிமண்டபம் மற்றும் 110 அடியில் சிலை வைக்க வேண்டும், தமிழகமெங்கும் போலி பிசிஆர் வழக்குகளால் பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இதை தடுக்க தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா தொண்டைமான், மாநில வர்த்தக அணி தலைவர் காளிமுத்து, மாநில பொறுப்பாளர்கள் தர்மா, மாரியப்பன், ஆறுமுகம், திருச்சி கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசேகர், தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர் வேலு, திருச்சி மாவட்ட தலைவர் ஹரி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
