தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த மே மாதம் 9-ம் தேதி திருச்சி பஞ்சபூர் பகுதியில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம் வருகிற ஜூலை 16ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். மேலும் மக்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பேருந்து முனையம் செயல்பாட்டிற்கு வந்த சில நாட்களில் அனைத்து கடைகளும் இயங்கும். சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் வழக்கம் போல் செயல்பாட்டில் இருக்கும். தற்போதைக்கு தனியார் பேருந்துகள் விருப்பப்பட்டால் பஞ்சப்பூர் பேருந்து நிலையம் வரலாம். மக்கள் முழுமையாக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் போது தனியார் பேருந்துகளும் அங்கு வந்து விடுவார்கள். ஆனால் அனைத்து அரசு பேருந்துகளும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

அரியமங்கலத்தில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக பிரித்து அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பிளாஸ்டிக்கை உரமாக மாற்றினோம், சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கு அங்கிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் அனுப்பப்பட்டது தற்பொழுது அந்த பிளாஸ்டிக் மூலம் சாலை அமைப்பது உள்ளிட்ட வேறு பணிகளுக்கு பயன்படுத்தலாமா என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தாலும் குப்பைகளை வேறு எங்கும் கொட்ட முடியாத சூழலில் அரியமங்கலம் குப்பை கிடங்கிலேயே கொட்டி வருகிறோம்.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தியது திமுக அரசு தான் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி அந்த திட்டத்தை நிறுத்துவோம். நிச்சயம் அந்த திட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். மக்களுக்கு ஒரு ரூபாய் கூட தராத எடப்பாடி பழனிச்சாமி நாங்கள் ஆயிரம் ரூபாய் தந்த பின்பு 1500 ரூபாய் தருவோம் என பேசுகிறார். உள்ளாட்சி அமைப்புகளை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக பரவும் தகவலில் உண்மை இல்லை நாங்கள் ஏற்படுத்திய அமைப்பை நாங்களே எப்படி கலைப்போம் என தெரிவித்தார். இந்த நிகழ்வின்போது திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மாநகராட்சி மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்