தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை திறன்மிகு உதவியாளர்கள் (சாலைஆய்வாளர்கள்) சங்க 4வது மாநில மாநாடு ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் எம்.சீனிவாசன் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் எம்.மோகன் வரவேற்றார். நெடுஞ்சாலை, ஊரக வளர்ச்சித்துறை ஓய்வு பெற்ற சாலை ஆய்வாளர்கள் நலச்சங்க மாநில பொதுச்செயலாளர் என்.குருசாமி துவக்கவுரை யாற்றினார். வேலை அறிக்கையை மாநில பொதுச்செயலாளர் சி.குருசாமி வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாநில பொருளாளர் ஆ.சாலமன் சமர்ப்பித்தார். மாநாட்டில் நடந்த கருத்தரங்கில் சமூக நீதியும், திராவிட மாடலும் என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் பேசினார்.

அதனைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சாலை பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளுக்கு மட்டுமின்றி சமூக நீதிக்காகவும், சமூக சிந்தனையோடு இந்த மாநாட்டை நடத்துவதை வரவேற்கின்றேன். திமுக அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையில் இந்த மாநாட்டை நடத்துகிறார்கள். என்போன்றவர்கள் அவர்களுக்கு துணையாக இருப்போம். தமிழ்நாட்டில் பழையபடி மதவாதம், மனுநீதி காலுன்ற முயற்சி செய்கிறது. சமூகநீதி இருக்கின்ற வரை மனுநீதி உள்ளே வர முடியாது. எனவே சமூக நீதியை காப்பாற்ற வேண்டும் என்றால் மனுநீதியை அனுமதிக்க கூடாது. மோடி தமிழ்நாட்டில் தேர்தலில் போட்டியிடுவதை வரவேற்கின்றோம். வேறு எந்த இடத்தை விடவும் தமிழ்நாடு தான் சிறப்பாக தீர்ப்பளிக்கும். காசியில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் மோடியை ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பதிலாக குஜராத்திற்கே அனுப்பி வைக்கும். மோடி மணிப்பூருக்கு மட்டுமல்ல நாடாளுமன்றத்திற்கு கூட வருவதில்லை என்றார்.நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் ந.சாந்தி, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் ரா.சந்திரசேகர், திருச்சி வட்ட கண்காணிப்புப் பொறியாளர் ஆர்.கிருஷ்ணசாமி, திருச்சி கோட்ட பொறியாளர் மு.கேசவன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பட்டய பொறியாளர்கள் சங்க மாநில தலைவர் எஸ்.மதனமுசாபர், நெடுஞ்சாலை ஆராய்ச்சி அலுவலர்கள் சங்க மாநில தலைவர் வி.சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் தகுதியுள்ள சாலை ஆய்வாளர்களுக்கு இளநிலை வரை தொழில் அலுவலர் பதவி உயர்வு வழங்க வேண்டும், நெடுஞ்சாலைத்துறையில் பணிபுரிந்து வரும் சாலை ஆய்வாளர்கள் பணியிடத்தினை நிரந்தர பணியிட வரிசையில் சேர்த்து நிரந்தர ஊதிய தலைப்பில் கீழ் ஊதியம் வழங்க வேண்டும், 2022 -2023ஆம் ஆண்டு வரை காலியாக உள்ள இளநிலைப் பொறியாளர் காலிப்பணியிடங்களை ஊட்டுப் பதவியில் தகுதி உள்ளவர்களை கொண்டு நீதிமன்ற உத்தரவுப்படி உடனடியாக நிரப்ப வேண்டும், சாலைகளின் நீளத்திற்கேற்ப சாலைப்பணியாளர்களின் பணியிடங்களை அதிகரிக்க வேண்டும், கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டங்களில் நிலை – 2ல் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கௌரவ பொதுச்செயலாளர் மு.மாரிமுத்து நிறைவுரையாற்றினார். மாநாட்டில் மகளிர் குழு நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள், மண்டல செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருச்சி கோட்டச்செயலாளர் எஸ்.கார்த்திக்கேசன் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *