தமிழ்நாடு – புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர் சங்கம் மற்றும் தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்புடன் இணைந்து பேப்பர் கப் அறிமுக விழா இன்று திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா பொதுச் செயலாளர் கோவிந்தராஜூலு பொருளாளர் சதக்கத்துல்லா திருச்சி மண்டல தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் ஸ்ரீதர், மாநகர தலைவர் கண்ணன்,மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி பேப்பர் கப் உற்பத்தியாளர் சங்கத்தின் நிர்வாகிகள் உற்பத்தியாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் பயன்படுத்துவதற்கான பேப்பர்கப்பை, பேப்பர் தட்டு ஆகியவற்றை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா மற்றும் நிர்வாகிகள் அறிமுகப்படுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்ரமராஜா கூறுகையில்:- பேப்பர் கப் ஏற்கனவே நடந்த ஆட்சியில் தடை செய்யப்பட்டது. இந்த ஆட்சியில் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாமல் பேப்பரில் மக்கும் தன்மை கொண்ட கப் மற்றும் தட்டுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு – பாண்டிச்சேரி பேப்பர் கப் சங்கத்தின் மூலமாக அறிமுகம் படுத்துகிறோம்.இது மக்கும் தன்மை உள்ளது. சூடான டீ, காபி உள்ளிட்டவைகளில் இதனை பயன்படுத்தலாம். கேன்சர் முற்றுப்புள்ளி வைக்கும் நிலையில் இது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்தும் அதில் பயணம் செய்து, வெற்றி பெற்றுள்ளது. இது தமிழகத்து மக்களின் வெற்றியாகும். இந்த பேப்பர் கப்புகளில் 120 டிகிரி சூடான தண்ணீரை ஊற்றி வைக்கலாம்.

உற்பத்தி செய்யப்பட்டுள்ள பேப்பர் கப் மற்றும் தட்டுகளில் ஓ.ஆர் கோடுகள் உள்ளது. அதனை ஸ்கேன் செய்து பார்க்கும் பொழுது அதன் பயன்பாடு, அனுமதி ஆகிய தகவல்களை நாம் தெரிந்து கொள்ளலாம். ஒரு சில அதிகாரிகள் இங்குள்ள வியாபாரத்தை கெடுக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்களை அள்ளிச் செல்கிறார்கள். தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் வெளி மாநிலத்தில் வருகிற பொருட்கள் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில்லை. இந்த பேப்பர் கப்பை கொண்டு சென்று சோதனை செய்தால் அதற்கெல்லாம் தகுதியாக தான் தயார் செய்துள்ளோம் எந்த சோதனை வைத்தாலும் வெற்றி பெறுவோம் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்