திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார். திருச்சி மாவட்ட செயலாளர் ராஜ்மோகன் வரவேற்புரை ஆற்றினார். மாநில பொருளாளர் நாராயணன் நன்றியுரை ஆற்றினார். இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை வரலாற்றில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்களுக்கு மாநில முன்னுரிமை மற்றும் 19 ஆண்டு கால கோரிக்கையான பட்டதாரி ஆசிரியர்களுக்கும் மட்டுமே நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கும் வகையில் விதிகளில் மாற்றம் செய்து அரசாணை எண் 243 வெளியிட உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர். மேலும் பள்ளி கல்வித் துறையில் இதுவரை நிறைவேற்றப்பட்ட அரசாணை சமூக நீதியும், சமத்துவமும் கொண்ட திராவிட மாடல் அரசின் , இந்த வரலாறு போற்றும் அரசாணையை வரவேற்றனர்.

மேலும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 12 லட்சம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை முழுமையாக ரத்து செய்து பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்திட தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கையை முன் வைத்தனர். மத்திய அரசுக்கு இணையான ஈட்டிய விடுப்பு, ஆசிரியர்கள் பெரும் உயர்கல்விக்கு பழைய முறைப்படி ஊக்க ஊதியம் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடையினை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும். மாணவர்களின் கல்வி நலன் கருதி அனைத்து உயர்நிலைப் பள்ளிகளிலும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை உறுதி செய்திட கேட்டுக்கொள்கிறோம். தொடக்க கல்வித்துறை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மேல்நிலை சார்நிலை விதிகளை திருத்தி நேரடி நியமனம் 10% முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்கிடவும், 51 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஆசிரியர்களுக்கு உயர் கல்வி தகுதிக்கான ஊதிய உயர்வை ரத்து செய்து வெளியிட்டுள்ள அரசாணையை திரும்ப பெற வேண்டும். தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக்கல்வித்துறையில் முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கும் உதவி பெறும் பள்ளிகளில் முன் அனுமதி பெறாமல் உயர் கல்வி பயின்ற ஆசிரியர்களுக்கும் சிறப்பு நிகழ்வாக உயர் கல்விக்கான பின்னேற்பு அனுமதி வழங்கிடவும், தமிழ்நாட்டில் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற TET தகுதி தேர்வு தேவையில்லை என்பதை கொள்கை முடிவாக தமிழ்நாடு அரசு அறிவித்திட வேண்டும்.

மேலும், 2004,2005, மற்றும் 2006 ஆம் ஆண்டுகளின் தொகுப்பூதிய பணி காலத்தை பணிக்காலமாக கணக்கில் கொண்டு பதவி உயர்வு மற்றும் தேர்வு நிலைக்கு அனுமதிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் பொறியியல் மருத்துவ படிப்பில் ஒதுக்கீடு காலை சிற்றுண்டி, புதுமைப்பெண் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் வழங்க வேண்டும். தேசிய கல்விக் கொள்கை 2020 உள்ள ஆசிரியர் மாணவர் சமூக பாதிப்பை ஏற்படுத்தும் பரிந்துரைகளை தமிழ்நாடு அரசு உறுதியாக பரிசளித்து மத்திய அரசிடம் தெரிவித்து மாநில உரிமைகளில் கல்வி உரிமை பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருக்க வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலகங்களில் துணை ஆய்வாளர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். பயிற்சிகளில் ஆசிரியர்களை ஏதுவாளர்களாக நியமனம் செய்வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ – ஜியோ சார்பாக மாநிலம் தழுவிய நடைபெற உள்ள போராட்டத்திற்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முழுமையாக ஆதரவு தருவது மட்டும் அல்ல, போராட்டத்தில் அனைவரும் பங்கேற்ப்போம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்