திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திருச்சி மாவட்டம், தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக எட்டு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் காமராஜ் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கவுரவ தலைவர் ஜெகநாதன், மாவட்ட செயலாளர் ஜெயபால், மாவட்ட பொருளாளர் முத்து, மாவட்ட துணை தலைவர்கள் குழந்தைவேலு ,லோகநாதன், மாவட்ட இணைகள் சண்முகம், மணிகண்டன் உள்பட200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக நியாயவிலைக்கடைகளில் தற்பொழுது புளூடூத் மூலம் மின்னனு எடை தராசு இணைக்கப்பட்டு விற்பனை மேற்கொள்ளும் போது ஒரு குடும்ப அட்டைக்கு பொருள் விநியோகம் செய்திட குறைந்த பட்சம் 8 நிமிடத்திலிருந்து 10 நிமிடம் வரை ஆகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் 50 குடும்ப அட்டைகளுக்கு மட்டுமே விநியோகம் செய்ய முடிகிறது. ஆகையால் பொதுமக்களுக்கும், நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கும் மோதல்போக்கு ஏற்படுவதுடன் பணியாளர்கள் புகார்களுக்கு உள்ளாகும் நிலையும் உருவாகிறது. இதனை களையும் பொருட்டு புளூடூத் முலம் விற்பனை மேற்கொள்வதை முற்றிலும் நீக்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் அல்லது காலதாமதம் ஏற்படாத வகையில் எளிமைப்படுத்தப்பட வேண்டும். நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கிலிருந்து முதன்மை சங்கங்களுக்கு நகர்வு செய்யப்படும் பொருட்களில் அரிசி 2 கிலோ முதல் 5 கிலோ வரையிலும் மற்றும் சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை ஆகிய பொருட்கள் 1 கிலோ முதல் 2 கிலோ வரையிலும் எடை குறைவாக வழங்கப்படுகிறது. எனவே அனைத்து பொருட்களும் சரியான எடையில் விற்பனை முனையத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்யப்படவேண்டும்.
மேலும் தற்போது முழு நேர கடைகளுக்கு மேம்படுத்தப்பட்ட பி ஓஸ்இயந்திரம் வழங்கப்பட்டும், பகுதி நேர கடைகளுக்கு பழைய பிஓஎஸ் இயந்திரமும் பயன்பாட்டில் உள்ளது. பழைய பிஓஎஸ் இயந்திரத்தில் கை விரல் ரேகை பதிவின் மூலம் விற்பனையை மேற்கொள்ள முடிவதில்லை, கருவிழி பதிவின் மூலம் மட்டுமே விற்பனையை மேற்கொள்ள முடிகிறது. கை விரல் ரேகை பதிவு, கருவிழி பதிவு ஆகிய இரண்டு முறைகளின் மூலமும் விநியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். நியாயவிலைக்கடை பணியாளர்களில் 40 சதவீதம் மகளிரும், 5 சதவீதம், மாற்றுத்திறனாளிகளும் பணிபுரிகின்றனர். எனவே நியாயவிலைக்கடைகளில் உள்ள பணிச்சுமையை கருத்தில் கொண்டு எடையாளர் ஒருவர் அனுமதிக்கப்பட வேண்டும், அது வரை வெளிப்பணி மூலம் உதவியாளர் ஒருவரை பணியமர்த்திகொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.மேலும் விடுமுறை நாளில் நகர்வு பணி மேற்கொள்ள கூடாது என்று அரசு ஆணை மற்றும் பதிவாளர் சுற்றறிக்கை இருந்தும் பெரும்பாலான மாவட்டங்களில் மண்டல இணைப்பதிவாளர், துணைப் பதிவாளர் ஆகியோரின் இசையுடன் கூட்டுறவு சார் பதிவாளர்கள் மூலம் விற்பனையாளர்கள் அச்சுறுத்தப்பட்டு நகர்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது இது முற்றிலும் கைவிடப்பட வேண்டும்.
விற்பனையாளர்கள் மாவட்ட தேர்வாணையக் குழு மூலம் நியமனம் செய்யப்படும் பொது பணி மூப்பு வரிசை உறுதிப்படுத்தப்படுகிறது. அடுத்த பதவி உயர்வுக்கு இதே பணி மூடை அடிப்படையாகக் கொண்டு அனைவருக்கும் பதவி உயர்வில் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். மேலும் நியாய விலை கடைகளில் தரமற்ற பொருட்கள் வருவதால் அவற்றை மக்களுக்கு விநியோகம் செய்யும்போது பிரச்சினைகள் ஏற்படுகிறது சில சமயங்களில் பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள். குறிப்பாக வருகின்ற பொருட்கள் தர மற்றவையாக ஒரு புறம் இருந்தாலும் சரியான குறிப்பிட்ட அளவுகள் வந்து சேர்வதில்லை ஆகையால் பொதுமக்களுக்கு பொருட்களை முறையாக வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினர். எங்களுடைய கோரிக்கைகளை மாநில அரசு உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அவ்வாறு மேற்கொள்ளவில்லை என்றால் வரும் 14. 7.2025 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் ( திருச்சி மாவட்டம்) தெரிவித்துள்ளது.