தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணையின் பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் ,மாநில நெடுஞ்சாலை துறை ஆணையத்தை கலைத்துவிட்டு, அரசாணை 140 ரத்து செய்ய வேண்டும் ,மாநில நெடுஞ்சாலைகளில் 210 சுங்கச்சாவடி அமைத்து கார்ப்பரேட் கம்பெனி சுங்கவரி வசூல் கொள்ளை நடத்த அனுமதிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140 – ஐ தீயிட்டு கொளுத்தும் போராட்டம் இன்று திருச்சி நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
திருச்சி மாவட்ட தலைவர் ஜீவானந்தம் மற்றும் புதுக்கோட்டை தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்ட தலைவர்கள் கருப்பையா, ஜனார்த்தனன், மகாலிங்கம், கணேசன், ரமேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட பொருளாளர்கள் பிரேம்குமார், கருணாநிதி, ரவிச்சந்திரன், ஸ்ரீதர், ஜவகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிச்சாமி தொடக்க உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர்கள் இளங்கோவன், முத்துக்கருப்பன், சந்திர சேனன், பொன்முடி, உதயகுமார், வெங்கடேசன், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க திருச்சி மாவட்ட தலைவர் பால்பாண்டி, மாவட்ட செயலாளர் நவநீதன், மாநில துணை மாநில துணைத்தலைவர் செல்வராணி ஆகியோர் விளக்க உரையாற்றினர். மாநில பொதுச் செயலாளர் அம்சராஜ் நிறைவுறையாற்றினார். மாவட்ட பொருளாளர் பிரான்சிஸ் நன்றி கூறினார்.
போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி சாலை பணியாளர்கள் அரசாணையை கொளுத்த முயன்றனர். அரசாணையை கொளுத்துவதாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி அரசாணையை தீயிட்டு கொளுத்த முயற்சி செய்த போராட்டக்காரர்கள் 50க்கும் மேற்பட்ட வரை போலீசார் கைது செய்து ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.