2026 தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு இன்று காலை வந்தார். அவருக்கு தவெக நிர்வாகிகள் தொண்டர்கள் ரசிகர் உள்ளிட்ட ஏராளமான உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து அவருடைய மஞ்சள் நிற பிரச்சார வாகனத்தில் ஏறி அங்கிருந்து சாலை மார்க்கமாக சுப்பிரமணியபுரம் டிவிஎஸ் டோல்கேட் தலைமை தபால் நிலையம் பாலக்கரை வழியாக மரக்கடையை சென்று அடைந்தார். வழிநெடுக அவரது ரசிகர்கள் தவெகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதனைத் தொடர்ந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சார வாகனத்தில் நின்றபடி உரையாற்றினார்.

அதில் அந்தக் காலத்தில் போருக்குப் போவதற்கு முன்பு போரில் ஜெயிப்பதற்காக குலதெய்வம் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிடுவார்கள்.அதுபோல 2026 ஜனநாயகப் போருக்கு தயாராவற்கு முன்பு மக்களை சந்திக்க வந்துளேன். உங்க விஜய் நான் வர்றேன்னு நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். உங்கள் சார்பாக நம்மை மேலேயும் கீழேயும் மிக மோசமாக ஆண்டுகொண்டிருக்கும் ஃபாசிச பா.ஜ.க.வையும் பாய்சன் தி.மு.க.வையும் கேள்வி கேட்க வந்துள்ளேன். இது இந்த ஒற்றைத் தமிழ்மகன் குரல் இல்லை. ஒட்டுமொத்த தமொழ்நாட்டு மக்களின் உரிமைக்குரல். மக்களை வாட்டி வதைக்கும் பா.ஜ.க.வையும் தி.மு.க.வையும் விடவே விட மாட்டோம். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம். இதன் மூலம் தேர்தல் தில்லுமுல்லுதான் நடக்கும். அதற்காகத்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு இதை கொண்டு வருகிறது. பார்லிமெண்ட் தொகுதிகள் மறுசீராய்விலும் தென்னிந்தியாவிற்கு எதிராக மிகப்பெரிய சதி உள்ளது.இதை தமிழக வெற்றிக்கழகம் ஏற்காது.எப்போதும் எதிர்க்கும். தமிழக மாணவர்களின் கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்காமல் சதி செய்கிறது. நமது இருமொழிக் கொள்கைக்கு எதிராக இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பதற்காக மிரட்டிப் பார்க்கிறது. அமர்நாத் ராமகிருஷ்ணாவிடம் கீழடி ஆய்வு முடிவுகளை மாற்றச் சொல்லி நெருக்கடி கொடுத்து,தமிழையும் தமிழர் நாகரிகத்தையும் ஒன்றிய பா.ஜ.க அரசு அழிக்கப் பார்க்கிறது.இதை தமிழகம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. மற்ற மாநிலங்களுக்கு கொடுப்பதுபோல தமிழ்நாட்டுக்குப் பேரிடர் காலங்களில்கூட ஒழுங்காக நிதி ஒதுக்காமல் ஒன்றிய பா.ஜ.க. அரசு வஞ்சிக்கின்றது இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டு தமிழக மீனவர்கள் அழிக்கப்படுவதை ஒன்றிய வேடிக்கை பார்க்கிறது. நீட் தேர்வால் தமிழக மாணவர்களுக்கு நேரும் துன்பங்களை கல்நெஞ்சத்துடன் கண்டுகொள்ளாமல் இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இது எல்லாம் ஒன்றிய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு சொய்யும் ஓரவஞ்சனைகளில் சில சாம்பிள்கள்தான். இப்படி ஒன்றிய பா.ஜ.க.வின் மோடி அரசு நம்மை வஞ்சிக்கிறது என்றால் இங்கிருக்கும் தி.மு.க. அரசு நம்மை நம்ப வைத்து ஏமாற்றுகிறது. 505 தேர்தல் வாக்குறுதிகளில் முக்கால்வாசி வாக்குறுதிகளை நிறைவேற்றாமலே நிறைவேற்றிவிட்டதாக மனசாட்சி இல்லாமல் சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள். முதல்வர் ஸ்டாலின் சார் விட்ட ரீல்கள் எல்லாம் பாதியிலேயே அறுந்துபோய்விட்டது. அப்படி அறுந்துபோன ரீல்களைப் பற்றி சொல்லட்டுமா?. கேஸ் சிலிண்டருக்கு மானியமா 100 ரூபா தர்றேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?… ஆயிரம் ரூபாய ஒருத்தர்விடாம எல்லா பெண்களுக்கும் தருவேன்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?… டீசல் விலையில மீதி இருக்க மூன்று ரூபாய குறைப்பேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?… நீட் தேர்வ ரத்து செய்வோம்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?… கல்விக்கடன ரத்து செய்வோம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிர்ந்தரம்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?… சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு அரசுப் பணி உறுதின்னு சொன்னீங்களே… செஞ்சீங்களா?… முதியோர் உதவித்தொகை 1500ரூபா தருவேன்னு சொன்னீங்களே…செஞ்சீங்களா?… இவை எல்லாவற்றையும்விட இந்த மாவட்டத்தில் கிட்னி திருட்டு நடந்தது எல்லோருக்கும் தெரியும்.அது நடப்பதே தி.மு.க. எம்.எல்.ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில்தான்.ஆனால் அது திருட்டு இல்லை முறைகேடு என்று வியாக்கியானம் பேசுகின்றனர். இந்த மாவட்டத்தில் இரண்டு மந்திரிகள் இருந்தும் இந்த மாவட்டத்துக்கு எதாவது பிரயோஜனம் இருக்கிறதா?. இவங்களுக்கு வருகிற தேர்தலில் ஓட்டுப் போடுவீர்களா?… ஆயிரம் ரூபாயை நீங்களே நமது பெண்களுக்கு தருவீர்கள். அதையும் எல்லாருக்கும் தர மாட்டீர்கள். ஆனால், ஆயிரம் ரூபாய் வாங்குறியே என்று ஒவ்வொருத்தரையும் நீங்களே அசிங்கப்படுத்துவீர்கள். இலவச பஸ் விட்டுவிட்டு ஓசியில போறீங்கன்னு பெண்களை அவமானப்படுத்துவீர்கள். இப்படி அசிங்கப்படுத்துவதற்கு நீங்கள் கொடுக்காமலே இருந்திருக்கலாமே?நம்முடைய தேர்தல் அறிக்கையில் எல்லாவற்றையும் தெளிவா விளக்கமா சொல்லுவோம்.ஸஅதை செய்வோம் இதை செய்வோம் என்று பொய்யான வாக்குறுதிகளை எந்றைக்கும் தரமாட்டோம்.எது நடைக்கு சாத்தியமோ எது உண்மையோ அதை மட்டும்தான் சொல்லுவோம். ஆனால் கல்வி,ரேஷன்,மருத்துவம்,குடிநீர், அடிப்படை சாலை வசதி,மின்சாரம் என்று அடிப்படைத் தேவைகளை சமரசமே இல்லாமல் நிறைவேற்றுவோம பெண்கள் பாதுகாப்பில், சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதில் சமரசமே கிடையாது. ஏழ்மை,வறுமை இல்லாத தமிழகம். குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம். ஊழல் இல்லாத தமிழகம். உண்மையான மக்களாட்சி, மனசாட்சி உள்ள மக்களாட்சி என அந்த தீர்வை நோக்கிச் செல்வதுதான் நமது லட்சியம்.அந்த லட்சியத்தை அடைவோம் அடைவோம் அடைந்தே தீருவோம் என பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்