திருச்சி மாநகர காவல்துறை சார்பில், திருச்சி மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில், காவல் துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினருக்கு ‘பாக்கெட் கேமரா’ வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. மாநகர காவல்துறை ஆணையர் சத்ய பிரியா பங்கேற்று, 54 போலீசாருக்கு ‘பாக்கெட் கேமரா’க்களை வழங்கி ரோந்து செல்ல இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களை கொடி அசைத்து துவங்கி வைத்தார்

 

அதனைத் தொடர்ந்து திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது: –

நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள பாக்கெட் கேமராக்கள் அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒரு வழக்கு தொடர்பாக சம்பவ இடத்துக்கு சென்று அவர்கள் விசாரிக்கும் போது, விசாரணை முழுவதும் கேமராவில் பதிவாகிவிடும். விசாரணைக்கு அந்த பதிவுகள் நல்ல பயனை அளிக்கும். இந்த கேமராக்களின் மூலம் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பதிவு செய்து கொள்ள முடியும் .இது 64 ஜி.பி. மெமரி திறன் கொண்டது. இந்த பாக்கெட் கேமிராவில் அவ்வப்போது பேக்கப் எடுத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. குறைந்த பட்சம், 5 மீட்டர் தொலைவில் நடைபெறுவதை துல்லியமாக பதிவு செய்து கேமிராவில் பதிவு செய்து கொள்ளலாம்.

திருச்சி மாநகரில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பார்களில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பவர்கள் மீதும், கள்ளச் சந்தையில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பவர்கள் மீதும், 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எந்த புகார் வந்தாலும் உடனடியாக போலீசார் சென்று சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். திருச்சி மாநகரில் அனுமதி இல்லாத பார்கள் எதுவும் கிடையாது. கள்ளச் சாராயத்தை தடுக்க, 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சட்ட விரோதமாக கள்ள சந்தையில் மது விற்றால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *