திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட காஜாமலை பகுதியில் பக்கிரிசாமி, கார்த்திகேயன், ரெங்கநாதன் உள்ளிட்ட 4 பேர் சாப்ட்வேர் நிறுவனம் நடத்தி வந்தனர். கடந்த 2012-ம் ஆண்டு இவர்கள் கனரா வங்கியில் ரூ. 22 கோடி கடன் வாங்கினர். பின்னர் 2019-ம் ஆண்டு நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகி விட்டனர். இதனையடுத்து வங்கியில் பெற்ற கடனுக்காக மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் உத்தரவின்படி காஜாமலை பகுதியில் உள்ள அவர்களுக்கு சொந்தமான ரூ.44 லட்சம் மதிப்புள்ள வீட்டை மண்டல துணை தாசில்தார் பிரேம்குமார், கனரா வங்கி ஊழியர்கள் ஜப்தி செய்ய சென்றனர்.

அப்போது, அடையாளம் தெரியாத 20-க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக உருட்டு கட்டைகளால் துணை தாசில்தாரையும் வங்கி ஊழியர்களையும் சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் படுகாயம் அடைந்த துணை தாசில்தார் பிரேம்குமார், வங்கி ஊழியர்கள் படுகாயத்துடன் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கத்தினர் அரசு தலைமை மருத்துவமனையில் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜப்தி நடவடிக்கையில் ஈடுபட முயன்றவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது இதுவரை காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கை எடுக்கவில்லை என வருவாய்த்துறை அதிகாரிகள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணிகளைப் புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்ட வருவாய் துறை சங்கத்தின் சார்பில் 750 க்கும் மேற்பட்டோர் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உடனடியாக தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அடுத்த கட்டமாக தமிழக முழுவதும் உள்ள வருவாய் துறை அதிகாரிகள் சங்கம் ஒருங்கிணைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் அரசு அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தாக்குதல் நடத்திய அனைவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று தெரிவித்தார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் கூறியும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என இரண்டாவது நாளாக ஆட்சியர் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *