திருச்சி எடமலைப்பட்டிபுதூர் காளியம்மன் கோவில் தெரு பகுதியில், மாநகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆகியவை ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருகிறது. இங்கு தொடக்கப்பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை மொத்தம் 644 மாணவ, மாணவியர்களும் மற்றும் உயர்நிலைப்பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை 841 மாணவ, மாணவியர்களும் சேர்த்து மொத்தம் 1485 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். ஒரே வளாகத்தில் இரண்டு பள்ளிகள் செயல்பட்டு வருவதாலும், ஆண்டு தோறும் மாணவ, மாணவியர்களின் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், போதிய வகுப்பறைகள் இல்லாத காரணத்தினால் உயர்நிலைப் பள்ளியினை இடமாற்றம் செய்வதற்கு எடமலைப்பட்டிபுதூர் ராஜீவ் காந்தி நகரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநகராட்சி கல்வி நிதியின் கீழ் ரூ.18.41 கோடி மதிப்பீட்டில் 2.91 ஏக்கர் பரப்பளவில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இன்று நடைபெற்ற திறப்பு விழாவின் அமைச்சர்கள் K.N. நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர் இப்புதிய பள்ளி வளாகத்தில் தரைதளம் மற்றும் முதல் தளத்தில் மொத்தம் 36 வகுப்பறைகள் 2 நிர்வாக அலுவலக அறைகள், 2 ஆசிரியர் அறைகள், 1 நூலகம், 3 ஆய்வகங்கள் மற்றும் 4 கழிப்பறைகள் (78 Seats) ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் 1620 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர். இந்நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் K.N. அருண் நேரு, மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாணவர்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்