தென் இந்தியாவின் முன்னணி பல்நோக்கு மருத்துவமனை குழுமமான காவேரி மருத்துவமனை, திருச்சியில் ஒரு பிரத்யேக புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கியுள்ளது. காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட் என்ற இந்த புதிய மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இதில் இம்யூனோ தெரபி மற்றும் துல்லிய கீமோதெரபி உட்பட பல்வேறு சிகிச்சைகளை வழங்குவதற்காக 50 படுக்கை வசதிகள் உள்ளது. மேலும் விழாவில் திருச்சி மேயர்மு. அன்பழகன், மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி, மண்டல குழு தலைவர் துர்கா தேவி, கவுன்சிலர் ஜெ. கலைச்செல்வி ஜெகநாதன், பகுதிச் செயலாளர் மோகன்தாஸ்,முன்னாள் மத்திய மாவட்ட திமுக துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மத்திய மாவட்ட திமுக பொறியாளர் அணி இன்ஜினியர் நித்தியானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் சந்திரகுமார் வரவேற்றார்.
இதில் பி. ஈ டி. சி.டி ஸ்கேனர் மற்றும் எண்டோபிரோன்கியல் அல்ட்ராசவுண்ட் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. புதிய மருத்துவமனை குறித்து கருத்து தெரிவித்த காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குநர், டாக்டர் செங்குட்டுவன் கூறும்போது, “திருச்சிக்கு அதிநவீன புற்றுநோய் சிகிச்சை தொழில் நுட்பத்தையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வருவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். கூடிய விரைவில் புற்றுநோய்க்கான அணு மருத்துவத்தையம் அறிமுகப்படுத்த உள்ளோம். எங்கள் பல்துறை குழுவில் குழந்தைப்பருவ புற்றுநோய் மற்றும் இரத்த புற்றுநோய்களுக்கான சிறப்பு நிபுணர்களும் உள்ளனர். இனி அதிநவீன, மேம்பட்ட புற்றுநோய் சிகிச்சைகளுக்காக பெரிய நகரங்களுக்குப் பயணம் செய்ய வேண்டிய தேவை தென் தமிழகத்தில் உள்ள நோயாளிகளுக்கு இல்லை, ” என்றார்.
காவேரி கேன்சர் இன்ஸ்டிட்யூட்டின் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் அனிஷ் கூறுகையில்: “புற்றுநோய் சிகிச்சை முறைகள் வேகமாக முன்னேறி வருகின்றன. எங்கள் புதிய மருத்துவமனையின் சிறப்பு அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சைகளையும் வழங்க வலுவான நிபுணர்கள் குழு முழுநேரமும் இருப்பதுதான். இங்கு சிகிச்சை பெறும் ஒவ்வொரு நோயாளியின் சிகிச்சை திட்டமும் பல்வேறு புற்றுநோயியல் நிபுணர்களின் குழுவால் கூட்டாக ஆலோசிக்கப்பட்டு தீர்மானிக்கப் படுகிறது. இதனால் ஒவ்வொரு நோயாளிக்கும் சிறந்த, பிரத்யேக சிகிச்சைகள் கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது என்றார்.