அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் செ.நந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளர் நந்தகுமார் தலைமையில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருச்சி மாநகர் முழுவதும் பேரணியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

திருச்சி பாலக்கரை மதுரை ரோட்டில் உள்ள மாநகராட்சி அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் நந்தகுமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு முடிவை தாக்கல் செய்தார். அப்போது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர். அதன் பின்னர் நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:- நான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகி யோர் நல்லாசியுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். என்னை சசிகலா வேட்பாளராக அறிவித்துள்ளார். கடந்த ஐந் தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப் படவில்லை. அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப் படவில்லை.

பர்மா பஜார் வியாபாரிகள் இன்றைக்கு வாழ்வாதாரம் இழந்து நடு ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள். அதே போன்று நடிகர் விஜய் சினிமா செல்வாக்கை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்து இங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டு பேருமே வெளியூரை சேர்ந்தவர்கள். நான் இந்த மண்ணின் மைந்தர். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன். தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன். சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் நல்லாசியுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன். என்னுடைய வெற்றி மக்களின் வெற்றி. இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக சென்னையிலிருந்து திருச்சி வந்த வேட்பாளர் நந்தகுமாருக்கு கே.கே.நகரில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளதா ளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். அதன் பின்னர் கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியில் உள்ள தனது இல்லத்தில் நந்தகுமார் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்
