திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் பல ஆண்டு காலமாக ஊசி, பாசி விற்று பிழைக்கும் பழங்குடியின நரிக்குற பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும் கோட்டை காவல் துறையை கண்டித்தும், 2014 தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி வியாபாரம் செய்யும் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தியும் பழங்குடி இன நரிக்குற பெண்கள் மற்றும் தரைக்கடை மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகள் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சி இளநிலை பொறியாளர் அலுவலக வளாகத்தில் வியாழனன்று குடும்பத்துடன் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு தரைக்கடைசங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை வகித்தார்.
போராட்டத்தை விளக்கி சிஐடியூ மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், தரைக்கடை சங்க மாவட்ட செயலாளர் செல்வி, தரைக்கடை சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகிய பேசினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் மாநகராட்சி அதிகாரிகள், கோட்டை காவல் ஆய்வாளர் ஆகியோருடன் நடந்த பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் இரண்டு நாட்கள் கால அவகாசம் கேட்டதை அடுத்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.