திருச்சி வரகனேரியில் செயல்பட்டு வரும் டி.எஸ்.எம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் செவந்திலிங்கம் முத்திரியர் பரம்பரை சார்பில் தோற்றுவிக்கப்பட்ட சித்தி விநாயகபிரான் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த 5ம் தேதி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த குடம் எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து 6ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாஜனம், வாஸ்து சாந்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலை 5.30 மணிக்கு முதல்கால பூஜையாக சோமகும்ப ஆராதனை, அங்குரார்பணம், கும்ப அலங்காரம் யாகசாலை பிரவேசம், பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை உள்ளிட்ட யாக பூஜைகள் நடைபெற்றது.
இதனையடுத்து 7ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து இன்று காலை அக்னிகார்யம், மூலஸ்தான ரக்சாபந்தனம், நாடி சந்தனம் பூஜைகள் நடந்ததை அடுத்து மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கும்பத்திற்கு கொண்டு செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க வேத விற்பன்னர்கள் கோவில் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து மூலவ சித்திவிநாயகபிரானிற்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த விழாவில் தருமபுர ஆதீன மௌனமட கட்டளையின் முனைவர் ஸ்ரீமத் மௌன திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் உள்பட ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். விழாவை டி.எஸ்.எம் உயர்நிலைப்பள்ளி நிர்வாகியும், பரம்பரை அறங்காவலருமான டி.செவ்வந்திலிங்கம் முத்திரியர் ஏற்பாடு செய்திருந்தார்.