திருச்சி அருகே எம். ஆர்.பாளையத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள் மறுவாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. அனுமதி இன்றி தனியாரால் வளர்க்கப்படும் யானைகள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்ட யானைகள் மீட்கப்பட்டு இந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகள் மறுவாழ்வு மையத்தில் தற்போது, இந்து, சந்தியா, ஜெயந்தி, மலாச்சி, இந்திரா, கோமதி, சுமதி, கிரபி, ரூபாலி ஆகிய 9 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இந்த 9 யானைகளுக்கும் தலா ஒரு பாகன் உள்ளனர்.

இந்நிலையில், திருநெல்வேலி பாளையங்கோட்டை பகுதியில் அனுமதி இன்றி, போதிய பராமரிப்பு இல்லாமலும் வளர்க்கப்பட்ட யானையை பிச்சை எடுக்க வைத்து துன்புறுத்துவதாக தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் வனத்துறையினரிடம் புகார் அளித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் 67 வயதான சுந்தரி என்ற பெண் யானையை மீட்டு நேற்று எம்.ஆர்.பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர். மறுவாழ்வு மையத்திற்கு புதிதாக வந்துள்ள சுந்தரி யானையை தலைமை வன பாதுகாவலர் ஆலோசனையின்படி, திருச்சி மாவட்ட வன அலுவலர் உதவி வனபாதுகாவலர் மற்றும் வனச்சரக அலுவலர் ஆகியோர் பார்வையிட்டனர்.

மேலும், வன கால்நடை மருத்துவ அலுவலர் யானையை பரிசோதித்து அதன் வயது, உடல்நிலை, எடை அளவு ஆகியவற்றின் அடிப்படையில் யானைக்கு வழங்க வேண்டிய உணவு வகைகள் குறித்து அறிக்கை கொடுத்த பின்னர் அதன் அடிப்படையில் தொடர் சிகிச்சை மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது அதுமட்டுமின்றி யானைக்கு காச நோய் உள்ளிட்ட ஏதேனும் நோய்கள் உள்ளதா என்பதை அறிய யானையின் சளி, சாணம், சிறுநீர் உள்ளிட்ட மாதிரிகளை கால்நடை மருத்துவர்கள் எடுத்து பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி உள்ளனர். புதிதாக வந்துள்ள யானை சுந்தரியையும் சேர்த்து மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் யானைகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *