தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோட்டை மற்றும் காந்தி மார்க்கெட் காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பினை மேம்படுத்தும் பொருட்டு தேவையான கண்காணிப்பு கோபுரங்கள், கண்காணிப்பு கேமராக்கள், ட்ரோன் கேமரா ஆகியவற்றை தற்காலிகமாக நிறுவியும், குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக பொது விளம்பரங்கள் மூலம் அறிவிப்புகள் வழங்கி குற்ற சம்பவங்களை தடுக்க சிறப்பான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் எவ்வித சிரமமும், அசம்பாவிதமும் இன்றி தீபாவளி பண்டிகையை கொண்டாட கீழ்கண்ட முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன் படி வருகிற 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி தெப்பகுளம் பகுதியில் இன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி புற காவல் நிலையத்தினை திறந்து வைத்தார்

அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- திருச்சி மாநகர பகுதிகளில் இலகுரக, மற்றும் கனரக வாகனங்கள் பகல் நேரங்களில் சரக்குகள் ஏற்றுவது மற்றும் இறக்குவதை தவிர்த்து இரவு 11.00 மணிக்கு மேல் அவர்களது பணிகளை செய்து கொள்ளுமாறும், மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்து தற்காலிக சாலையோர கடைகளை முறைப்படுத்தி போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர்கள் மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர்களுடன் கலந்து பேசி போக்குவரத்தை முறைபடுத்தவும், பொதுமக்கள் சிரமமின்றி தங்களது தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில் காவல் துறை சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி புத்தாடைகள் மற்றும் பொருள்கள், வாங்க வரும் பொதுமக்கள் அவர்களுடன் அழைத்து வரும் குழந்தைகளையும், உடமைகளையும் பாதுகாக்கும் விதமாகவும், சந்தேகப்படும்படியான நபர்கள் பற்றிய தகவல்களை காவல் துறையினருக்கு தெரிவிக்கும் விதமாகவும், பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்களது குறைகள் தொடர்பாக புகார் கொடுக்கவும் என்எஸ்பி ரோடு தெப்பக்குளம் அருகில் தற்காலிக காவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையங்களில் பொது அறிவிப்பு மையம் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு காவலர்கள் மூலம் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர்ந்து கண்காணித்து குற்றச் சம்பவங்கள் நிகழா வண்ணம் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மேலும் இப்பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பை கவனிக்கவும் குற்ற நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு அதிநவீன சுழலும் PTZ கேமராக்கள் உட்பட்ட 180 க்கு மேற்பட்ட சிசிடி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்:-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்