தூய்மை பணியாளர்கள் நல வாரிய கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. வாரிய தலைவர் ஆறுச்சாமி தலைமையில நடந்த கூட்டத்தில் துணை தலைவர் கனிமொழி, திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், அரசு அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தூய்மை பணியாளர்கள் அவர்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். தொடர்ந்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-, திருச்சி மாவட்டத்தில் தூய்மை பணியாளர்கள் நல ஆய்வு கூட்டம் நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டு தூய்மை பணியாளர்களுக்கு நல வாரியத்தை அப்போதைய முதல்வர் கலைஞர் உருவாக்கினார். அதன் பின் அதிமுக ஆட்சியில் பத்தாண்டு காலம் செயல்படவில்லை மீண்டும் திமுக ஆட்சி அமைந்த உடன் மீண்டும் வாரியத்தை உயிர்ப்பிப்போடு முதல்வர் ஸ்டாலின் வைத்துள்ளார். ஆண்டுக்கு 15 கோடி ரூபாய் வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் ரூ.4.37 கோடி செலவழிக்கப்பட்டு தற்போது ரூ.40 கோடி கையிருப்பில் உள்ளது. நிதியை முழுவதும் தூய்மை பணியாளர்கள் நலத்திற்கும் அவர்களின் குழந்தைகளின் கல்விக்கும் தான் செலவழிக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வாரியத்தில் 20 ஆயிரமாக இருந்த உறுப்பினர்கள் எண்ணிக்கை தற்போது 3.20 லட்சமாக உயர்ந்துள்ளது.
குறைந்தப்பட்சம் 10 லட்சம் பேரை வாரிய உறுப்பினர்களாக இணைக்க வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். தனியார் துறைகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோரை இணைத்து 10 லட்சமாக உயர்த்த திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து வருகிறோம். திருச்சி மாநகராட்சியில் ரூ.3 கோடியில் பாதாள சாக்கடை அடைப்பை நீக்க இயந்திரம் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது என திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறியுள்ளார். அதற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இதில் திருச்சி மாநகராட்சியும், மாவட்டமாக இருக்கிறது. தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை கூற குறைதீர் கூட்டம் வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தோம் ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அந்த குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார் அதற்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். நல வாரியத்தை உறுப்பினர்களாக சேர்க்க 6 மண்டலங்களாக பிரித்து அந்த பணிகள் இந்த மாதத்தில் தொடங்கப்படும். தூய்மை பணியாளர்களின் போராட்டம் வருத்தமளிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் இன்று மாலைக்குள் நிச்சயம் நல்ல முடிவு ஏற்படும். நான் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துள்ளேன். அவர்களின் கோரிக்கைகளை ஏற்கனவே கேட்டு வந்துள்ளேன். அதனை முதல்வரிடமும் மனு அளிக்க உள்ளேன்.
26 மாவட்டங்களில் ஆய்வு செய்ததில் தூய்மை பணியாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.500 முதல் ரூ.550 கிடைக்கும் என கோரிக்கை வைத்துள்ளார்கள். இது குறித்து முதல்வரிடம் கோரிக்கை வைத்து அதை நிறைவேற்ற முயற்சிப்போம். ஊதிய உயர்வு தொடர்பாக துணை முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனியார் துறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை உள்ளது. சட்டம் அனைவருக்கும் ஒன்று தான். அதனால் ஊதியம் உயர்வு தொடர்பாக அவர்களின் கருத்தும் பரிசீலிக்கப்படும். பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய ரோபோட்டிக் இயந்திரம் உள்ளது அதன் விலை 60 லட்சம் ரூபாய். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்து 10 இயந்திரங்களை யாவது திருச்சிக்கு கொண்டு வர முயற்சி செய்வோம். இந்த இயந்திரம் சென்னையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மை பணியாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் முடிவெடுப்பார். தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது சிலர் அதை அணிந்து பணியாற்றுவதில் சிரமம் இருப்பதாக கூறுகிறார்கள் இருந்த பொழுதும் கட்டாயமாக அதனை அணிந்துதான் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம் பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கப்படவில்லை என்றால் அவர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார் என்றார்.