தேசிய அளவிலான கராத்தே போட்டி, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் கடந்த 12.06.2025 ஆம் தேதி தொடங்கி, 15.06.2025 ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. தேசிய அளவிலான இப்போட்டியில் இந்தியா முழுவதுமிருந்து வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு சார்பாக மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்ற 120 வீரர்கள் பங்கேற்றனர். திருச்சி மாவட்டத்திலிருந்து 9 பேர் இதில் பங்கேற்றனர். இந்தியா முழுவதுமிருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இப்போட்டியில்,
அதிக பதக்கங்களை வென்று தமிழ்நாட்டு அணியினர் முதலிடத்தை பிடித்துள்ளனர். அதில் திருச்சியை சேர்ந்த பள்ளி மாணவி தனண்யஸ்ரீ என்பவர் வெள்ளி பதக்கத்தையும், சுபந்தனா, தனுஷ்கா மற்றும் மித்ரா ஆகியோர் வெண்கலப் பதக்கத்தையும் வென்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில், பதக்கங்களுடன் திருச்சி விமானநிலையத்தில் வந்திறங்கிய மாணவிகளை, அவர்களது பெற்றோர்கள், பயிற்சியாளர்கள், சக விளையாட்டு வீரர்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்தும் சால்வை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த போட்டி குறித்து பேசிய மாணவிகள் போட்டி மிகவும் கடுமையாக இருந்ததாகவும் அதில் போராடி வெற்றி பெற்றதாகவும் தெரிவித்தனர். வருங்காலத்தில் தங்கம் வென்று ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது தான் லட்சியம் எனவும் தெரிவித்தனர். வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி தனன்யஸ்ரீ திருச்சி மாவட்ட காவல் துறையில் பணியாற்றும் காவலர் தனசேகர் என்பவருடைய மகள் என்பது குறிப்பிடத்தக்கது.