இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் அங்கமான, சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்கத்தில், 63 தொழிலாளர் நல சங்கங்கள் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதில் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாது, பிற மத தொழிலாளர்களும் உறுப்பினராக இணைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதன் மாவட்ட செயலாளராக இருப்பவர் பரக்கத் அலி, இதன் தேசிய மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் நூருதீன் அஸஃபி. இந்த சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்கம் சார்பில் வருகிற 24-ஆம் தேதி, திருச்சி தென்னூர் ஜெனரல் பஜார் பள்ளிவாசலில் மாநில பொதுக்குழு கூட்டம் நடக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் ஹக்கீம் என்பவருடன் கட்சியினர் சிலர் பள்ளிவாசலில் பிரச்சனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருதரப்பினருக்கிடையே பேச்சுவார்த்தை முற்றி கைகலப்பானது. இதில் தாக்குதலுக்கு உள்ளான சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்க ஒருங்கிணைப்பாளர் நூருதீன் அசஃபி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஹக்கீம், சமூக வலைதளங்களில், தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சிகிச்சையில் இருப்பதை மறைத்து விட்டு, தலைமறைவாகி விட்டதாக பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், இஸ்லாமியர்கள் மட்டுமே சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்றும், பிற மதத்தினரும் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நிலையில் மதப் பிரிவினையை தூண்டுவதாகவும், சங்கம் தனது கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும், தன்னிச்சையாக செயல்படுவதாக அவர் (ஹக்கீம்) மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் ஹக்கீம் மீது நடவடிக்கை எடுத்து, அவரை கைது செய்ய வேண்டும் என சுதந்திர தொழிலாளர் ட்ரேட் யூனியன் சங்கத்தினர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் மனு அளித்துள்ளனர்.இந்த புகார் மனு மீது முறையான நடவடிக்கை இல்லையெனில், திருச்சி மாநகர காவல் ஆணையரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *