தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் விவசாயிகள் பயிரிட்ட நெல் பயிர்களில் அதிக அளவு மழை நீர் சேர்ந்து ஈரப்பதம் அதிகரித்துள்ளது. பல்வேறு இடங்களில் வயல் பகுதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது . ஏற்கனவே, பருவமழை தீவிரம் அடைந்ததை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.  அறுவடை செய்யப்பட்ட நெல்கள் கடந்த செப்டம்பர் மாதம் முதல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பருவ மழையால் நெல் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால் நெல்லின் ஈரப்பதத்தை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை விவசாயிகள் வைத்தனர்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பாக, மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்தது. அதனையடுத்து நெல் ஈரப்பதம் தொடர்பாக மத்திய அரசின் சார்பில் ஆய்வு செய்ய குழு தமிழ்நாட்டிற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மூன்று குழுவினர் தமிழ்நாட்டிற்கு நேற்று முந்தினம் இரவு வந்தனர். அதில் ஒரு குழுவினர் செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மற்ற இரண்டு குழுக்கள் திருச்சி, தஞ்சை , புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும் ஆய்வு செய்ய திட்டம் செய்து இருந்தனர். ஒவ்வொரு குழுவிலும் உணவுத்துறை அதிகாரி மற்றும் இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் கொண்டு மூன்று பேர் அமைக்கப்பட்டு இருந்தனர்.

மத்திய உணவு துறை துணை இயக்குனர் ஆர்.கே.ஷாகி தலைமையில் தொழில்நுட்ப வல்லுனர்களான ராகுல் சர்மா மற்றும் தனூஜ் சர்மா ஆகியோர் இன்று திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம் வாளாடி வேலாயுதபுரம், நகர், உள்ளிட்ட 6 இடங்களில் மத்திய உணவுதுறை அலுவலர்கள் குழு ஆய்வு செய்தனர். உடன் திருச்சி மாவட்ட நிர்வாக அதிகாரிகள் இருந்தனர். கொள்முதல் நிலையத்தில் அதிகாரிகள் ஆய்வின் போது நெல்லின் ஈரப்பதம் 17 முதல் 22 வரை காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *