திருச்சி வரகனேரி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 72). பெயிண்டரான இவருக்கு திருமணமாகி அஞ்சலமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலமேரி உடல்நிலை சரியில்லாமல் திருச்சி இ. பி. ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவருக்கு பிசியோதெரபி செய்வதற்காக மருத்துவமனையில் இருந்து நர்ஸ் ஒருவர் அடிக்கடி ராஜமாணிக்கத்தின் வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு வந்த பெண் ஒருவர், தான் மருத்துவமனையில் இருந்து வருவதாகவும், அஞ்சலமேரிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் கூறி உள்ளார். இதனை நம்பிய அஞ்சலமேரி அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றார்.
இதைத் தொடர்ந்து அந்த பெண் சிகிச்சையை தொடர கழுத்தில் உள்ள தாலி சங்கிலியை கழற்ற கூறியதாக தெரிகிறது. இதற்கு சம்மதித்த அஞ்சலமேரி தனது ஒன்றேகால் பவுன் தாலி சங்கிலியை கழற்றி அருகில் வைத்தார். தொடர்ந்து சிகிச்சை முடிந்து அந்த பெண் புறப்பட்டு சென்றாள். இதனையடுத்து வீட்டிற்குள் சென்று அஞ்சலமேரி பார்த்தபோது தாலி செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராஜமாணிக்கம் காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நர்ஸ் என பொய்யாக கூறி தாலி செயினை திருடி சென்றது திருச்சி உறையூர் கீழபாண்டமங்கலத்தை சேர்ந்த சார்லின் மேரி (வயது35) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து சார்லின் மேரி மீது வழக்குபதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில்., கைது செய்யப்பட்டுள்ள பெண் போலி செவிலியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மருத்துவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில்.., செவிலியர் சாரலின் மேரி தன்னை பிசியோதெரபிஸ்ட் என்று சொல்லி போலி பிசியோதெரபிஸ்ட் ஆக வரகனேரியை சேர்ந்த அஞ்சலி மேரி என்பவருக்கு சிகிச்சை அளித்ததின் பெயரால் அவர் மீது போலி மருத்துவர் சட்ட பிரிவின் பேரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் நோயாளிடம் நகையை திருடி பொது இயன்முறை மருத்துவர்கள் நன் மதிப்பு மற்றும் சேவையை அவமானப்படுத்தி களங்கம் ஏற்படுத்தியதற்காக அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பொது இயன்முறை மருத்துவர்கள் திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.