தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்  54 வது நாளான இன்று விவசாயிகளின் விருப்பத்திற்கு உரிய விலை கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதால் , மண்டை ஓடுகளை வைத்து சட்டி ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த காத்திருப்பு போராட்டத்தின் கோரிக்கைகளாக:- 2016 – ல் வறட்சியின் பொழுது பெரிய விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கூறிய பிறகு , பெரிய விவசாயிகள் வாங்கிய குறுகிய கால கடனை விவசாயிகளின் கையெழுத்தை பெறாமலே போலியாக  கையெழுத்தை  போட்டு மத்திய கால கடனாக அதிமுக அரசு மாற்றி வைத்தது, ஆகையால்  விவசாய கடனை தள்ளுபடி செய்து விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். மேட்டூரில் இருந்து வெள்ள நீராக கடலில் கலக்கும் வெள்ள நீரை மேட்டூர் அணையின் வடபுறம் கால்வாய் வெட்டி, அய்யாற்றுடன் இணைத்து சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்ட விவசாயிகளை காப்பாற்ற வேண்டுகிறோம். அதேபோல் ஆலடியாறு டேமில், துளையிட்டு கீழ்கூடலூர், கம்பம், தேனி, பெரியகுளம், திண்டுக்கல், எரியோடு, கடவூர் வழியாக பொன்னியாறு டேமில் இணைத்தால், தேனி, மதுரை, திண்டுக்கல், கரூர், திருச்சி மாவட்ட விவசாயிகள் பயன்பெற முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும்  காவிரியில் மேகதாது அணைக்கட்ட கூடாது என்றும் காவிரியில் மாத மாதம் தண்ணீர் திறக்க மத்திய அரசை வற்புறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். விவசாயிகள் உரிமைக்காக ஜனநாயக நாட்டில் , டெல்லி சென்று போராட முதலமைச்சர் அனுமதி வழங்க வேண்டும் ,என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாகண்ணு பேசியது.. காவேரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு திறக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் விவசாயிகளை அமைச்சர்களும் கண்டு கொள்ளவில்லை பிரதமரம் கண்டு கொள்ளவில்லை விவசாயிகள் நாட்டின் அடிமைகள் என்பது போல் நடந்து கொள்கிறார்கள். விவசாயிகளுக்கு உரிய விளைச்சலுக்கு லாபகரமான விளையும் கிடைக்கவில்லை, தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் ஒருவேளை உணவுக்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். இதனை உணர்த்தும் வகையில் இன்று விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *