கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவேரி நீர் திறந்து விடப்பட்டது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேரில் சென்று காவிரி நீரை திறந்து வைத்தார். மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை கடந்து இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தடைந்தது. முக்கொம்புக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவியும் நெல் மணிகள் தூவியும் உற்சாகமாக வரவேற்றனர்.
முன்னதாக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலிருந்து மேளதாளங்கள் வாங்க ஊர்வலமாக வந்தனர். முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் சிலைக்கும் கரிகாலன் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையலிட்டு பூஜை செய்தனர். அதனையடுத்து வாழ்த்து முழக்கங்கள் முழங்க மலர்கள் தூவியும் நெல்மணிகள் தூவியும் காவிரி நீரை வரவேற்றனர்.
ஜூன் 12-ஆம் தேதியான சரியான தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுடன் பேசி தொடர்ந்து தண்ணீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நெல்லுக்கு குவின்டாலுக்கு 2500 ரூபாய் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி தான் ஆனால் அது குறைவான தொகையாக உள்ளது அதனை கூடுதலாக உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் தூர் வாரும் பணிகள் 70% நிறைவடைந்துள்ளது கடந்த ஆண்டு விட சிறப்பாக தூர்வாரும் பணிகள் அனைத்தும் நடந்துள்ளது. கடைமடை வரை தண்ணீர் சேர்ந்த சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள் கேட்டுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொருளாளர் அயிலை சிவசூரியன் மற்றும் தமிழ்நாடு ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் பூவை விஸ்வநாதன் ஆகியோர் தலைமையில் பல்வேறு விவசாயிகள் அணியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.