திருச்சி மாநகரையும். ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் ஏற்கெனவே இருந்த சிறிய பாலத்துக்கு மாற்றாக 1976 -ம் ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் தற்போதும் பயன்பாட்டில் உள்ளது. இதனிடையே திருச்சி. ஸ்ரீரங்கம் இடையே வாகனப் போக்குவரத்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் கட்ட மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் திட்டமிட்டு, அதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு அரசுக்கு கருத்துரு அனுப்பபட்டது. இப்பாலத்திற்கான நிர்வாக ஒப்புதல் அரசிடம் பெறப்பட்டு தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டு ஒப்பந்த புள்ளி கோரப்பட்டு திருச்சி எஸ்.டி. இன்பிராவுக்கு பணி ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த புதிய பாலம் தற்போதுள்ள பாலத்துக்கு மேற்குபுறத்தில் திருச்சி மேலசிந்தாமணியிலிருந்து மாம்பழச்சாலை வரை 545 மீட்டர் நீளத்துக்கு 15 மீட்டர் அகலமுள்ள நடைபாதையுடன் சேர்த்து 17.75 மீட்டர் அகலத்தில் நான்குவழித்தடங்களுடன் அமைகிறது.

 இதற்கென ரூ.106 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், பாலம் கட்டுமானத்துக்கு ரூ.68 கோடியும், நில ஆர்ஜிதத்துக்கு ரூ.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இது தவிர அணுகுசாலைகள், ரவுண்டானா கட்டுமானம், மின்வசதி, மின்கம்பங்கள் உள்ளிட்டவைகளை மாற்றுதல் உள்ளிட்ட வைகளுக்கு மீதித் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்பால பணிகள் தொடங்கப்பட்டு 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப் பட்டுள்ளது. இப்பணிக்கான அடிக்கல் நாட்டும் விழா நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமையில் இன்று காலை நடைபெற்றது.நிகழ்ச்சியில் கலெக்டர் பிரதீப் குமார், மாநகராட்சி ஆணையர் சரவணன், மத்திய மாவட்ட திமுக. செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், எம்.எல்.ஏக்கள் இனிகோ இருதயராஜ், பழனியாண்டி, ஒன்றியச் செயலாளர் கதிர்வேல், தில்லைநகர் கண்ணன், பகுதி செயலாளர்கள் ராம்குமார், மோகன், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள், கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்