திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் விஜயபாரதிக்கும் திருச்சியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் திருமணம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி – மனிஷாவை வாழ்த்தினார். இந்த திருமண நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன், திமுக துணை பொதுச்செயலாளர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, மதிமுக துரை வைகோ, எம்.எல்.ஏக்கள் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், இனிகோ இருதயராஜ். சௌந்தர பாண்டியன், கதிரவன், ஸ்டாலின்குமார், அப்துல் சமது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,

தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர். ஆர்.விஸ்வநாதன், வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவரும், தமிழர் தேசக் கட்சித் தலைவருமான கே.கே. செல்வக்குமார், மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டலக்குழுத் தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், முத்தரையர் சங்க நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், உறவினர்கள், நண்பர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சட்டமன்ற,நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் என பலர் கலந்து கொண்டர். முன்னதாக நன்றி தெரிவித்து பேசிய ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி, திமுகவிற்கு 2026 தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாய்கான காசோலையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மணக்களை வாழ்த்திய பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பழனியாண்டி திருமணத்தை கலைஞர் நடத்தி வைத்தார். பழனியாண்டி சகோதரர் திருமணத்தையும் பழனியாண்டி மூத்த மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்தேன். தற்போது அவரின் இளைய மகன் திருமணத்தையும் நான் நடத்தி வைத்துள்ளேன். பழனியாண்டி பேரன், பேத்திகள் திருமணத்தையும் நான் நடத்தி வைப்பேன் என்கிற நம்பிக்கை எனக்கு உள்ளது . திமுக வை கழகம் என்று மட்டுமல்ல இயக்கம் என கூறுவார்கள். இயக்கம் என்பது நமக்கு ஓய்வே கிடையாது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்கி கொண்டு இருப்பது தான் இயக்கம். உடன்பிறப்பே வா நிகழ்வை நடத்தி வருகிறோம். அந்த நிகழ்வில் திமுகவினர் தெரிவிக்கும் மகிழ்ச்சி எனக்கு ஊக்கமாக இருக்கிறது.

எதிரிகள் நம்மை வீழ்த்த புது புது யுக்திகளையும், முயற்சிகளையும் செய்து வருகிறார்கள். வருமான வரி துறை, சி.பி.ஐ ஆயுதமாக ஏவினார்கள். தற்போது எஸ்.ஐ.ஆர் என்கிற ஆயுதத்தை எடுத்து திமுக வை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆனால் மற்ற மாநிலங்களில் வேண்டுமானால் நடக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் ஒரு போதும் அது நடக்காது. திமுகவை அவர்களால் அழிக்க முடியாது. எஸ்.ஐ.ஆருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்துள்ளது. அதில் தங்களையும் இணைத்து கொள்ள வேண்டும் என அதிமுகவும் மனு தாக்கல் செய்துள்ளார்கள்.

உண்மையான அக்கறை இருந்தால் அவர்கள் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். பா.ஜ.க என்ன கூறினாலும் அதை அதிமுகவினர் ஆதரிக்கிறார்கள். அவர்களுக்கு அடிமையாக இருக்கிறார்கள். அவர்களை எதிர்க்க அதிமுகவினருக்கு துணிச்சல் இல்லை. எஸ்.ஐ.ஆரை ஆதரித்த அவர்கள் தற்போது எஸ்.ஐ.ஆருக்கு எதிராக திமுக போட்ட வழக்கில் தங்களை இணைத்து கொண்டுள்ளார்கள் என்றால் அவர்கள் கபட நாடகத்தை நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.

டெல்லியில் இருக்கும் பிக் பாஸ்க்கு பழனிச்சாமி ஆமாம்சாமி போட்டு தான் ஆக வேண்டும். இங்கு பேசிய செல்வக்குமார், முத்தரையர் சமுதாயத்தினர் மீது கடைக்கண் பார்வையை திருப்புங்கள் என்றார். ஆனால் எல்லா பார்வையும் உங்கள் பக்கம் திரும்பும். திராவிட மாடல் ஆட்சி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பது தான். அனைவருக்குமான ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் இந்த ஆட்சி நடந்து கொண்டுள்ளது. இந்த ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும். திமுகவிற்கு தேர்தல் நிதியாக 51 லட்சம் ரூபாயை பழனியாண்டி வழங்கி உள்ளார். அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். இன்னும் அதிகமாக தருவார் என நம்புகிறோம் என்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது சகோதரர்கள் சோமரசம் பேட்டை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராஜாங்கம், வழக்கறிஞர் மருதையா, அரசு ஒப்பந்தகாரர் பெரியசாமி, பழனியாண்டி எம்.எல்.ஏவின் மூத்த மகனும் தொழிலதிபருமான விமலாதித்தன் மற்றும் ரவி, லட்சுமணன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.
