தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஏகத்துவ எழுச்சி மாநாடு திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாநில தலைவர் அப்துல் கரீம் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சுலைமான் மாநிலச் செயலாளர் சபீர் அலி மற்றும் மாவட்ட தலைவர் குலாம்தஸ்தகீர் உட்பட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாநில தலைவர் அப்துல் கரீம் கூறுகையில்… இஸ்லாம் குறித்த சரியான விழிப்புணர்வையும், குழந்தைகள் தவறான பாதைக்கு செல்லக்கூடாது. நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று இளைய சமுதாயத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெறுகிறது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் தர்கா மற்றும் கோவில் விவகாரத்தை வைத்துக் கொண்டு தமிழகத்தில் பாஜக உள்ளிட்ட, சங்பரிவார் அமைப்புகள் மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற இந்து முஸ்லிம் மக்களிடையே மத மோதலையும் வெறுப்பையும் உண்டாக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்தார். தமிழகத்தை அயோத்தியாக மாற்றுவோம் என்ற வார்த்தை தேவையற்றது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு அவர்கள் மீது உரிய வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தமிழகத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை, பேரிடர் காலங்களிலும் முறையான நிவாரணம் தருவதில்லை. மத்திய அரசு நாங்கள் சொல்லும் கல்வித் திட்டத்தை கொண்டுவர வேண்டும் இல்லை என்றால் நிதி வழங்க மாட்டேன் என கூறுகின்றனர். மத்திய அரசு கல்வி உரிமையை பறிக்கும் போக்கை வன்மையாக கண்டிக்கிறோம் .புதுக்கோட்டையில் சமூக ஆர்வலர் ஜெகபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பதை கண்டித்த வாலிபர் அவரது நண்பர் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.தமிழக அரசு, காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி இஸ்லாமியர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் என கண்டறிந்து அதற்கான இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. இஸ்லாமியர்கள் 7 சதவீதம் இருந்தாலும் அரசு 5% ஒதுக்கீடு கொடுத்தாலும் முதலில் அதை ஏற்றுக் கொண்டு வரவேற்போம் என்றார்.